47
« on: February 03, 2023, 01:42:51 pm »
அர்த்தஜாம நேரத்தில் பரந்த அறையில் நான் விழித்திருக்க
விந்தையாய் ஒரு சத்தம் கேட்க சட்டென மரங்கள் அமைதியை தத்தெடுத்துக் கொண்டன
இரவு நேரம் அது, ஒற்றை மின்விளக்கின் ஒளியில் ஓவியம் ஒன்று வரைந்து கொண்டிருந்தேன்
ஒரு கோடு வரைவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது
ஒவ்வொரு முறையும் கடிகாரத்தை பார்க்கும் பொழுது 12 என காட்டுகிறது.. ஓடாத கடிகாரம் என்று நினைக்கிறேன்
ஓரளவு வரைந்து முடித்து விட்டேன் இருந்தும் உள்ளத்தில் ஒரு அச்சம், தனிமையில் இருக்கிறேன் என்று நினைத்து அல்ல... தனியாக இல்லை என்று.
யாரோ என்னிடம் நீ தவறு செய்கிறாய் என்று கூறுவது போல இருந்தது, ஏதோ ஒன்று அந்த ஓவியத்தை வரைய தடுப்பது போல ஒரு உணர்வு
இருந்தும் அது என்னுடைய மனசாட்சி என்று நினைத்துக் கொண்டேன்
தாகத்தில் நான் இருக்க தண்ணீர் பருக சென்றிருந்தேன்
கதிரவனுக்கு விடுமுறை அளித்தது போல அவ்விடம் முழுவதும் இருளே ஆட்சி செய்தது
தண்ணீர் மல்க கவிதை ஒன்று நான் ஓவியம் வரைந்த காகிதத்தில் கண்டேன்
அதில் நீ வரைந்த ஓவியத்தை யாரிடமும் காட்டாதே காட்டினால் நீ காணாமல் போய்விடுவாய், என்று எழுதப்பட்டிருந்தது
இருண்ட அறையில்
அரண்ட என் இதயம்
வரண்ட நாவிற்கு தண்ணீர் தேட
உருண்ட பானையில் ரத்த களம்
அப்பொழுது நான் காகிதத்தில் வரைந்த ஓவியம் என் கண் முன்னே!!
ஒற்றை உருவம்
கற்றை முடி விரித்து
நான் வரைந்த ஓவியத்துடன் மீதி உருவமும்,
மல்லிகை வாசத்தோடு,
மெல்லிய கொலுசொலியும் சேர்ந்து வர,
என் இதயம் நிமிடத்திற்கு 74 முறை துடித்தது
கனவுதான் காண்கிறேன் என்று நினைத்து கண் உறங்கி விட்டேன்
காலை நேரம் அது கண்விழித்து முழித்துக் கொண்டேன் முழுமையாக என் ஓவியத்தை முடிப்பதற்கு ஆனால் அது ஏற்கனவே முடிக்கப்பட்டு இருந்தது
தலை விரித்த கூந்தலுடன் அழகான முகம் அது,
இருப்பினும் அந்த ஓவியம் மனதில் ஒரு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியது
என் உயிர் நண்பனிடம் காட்ட நினைத்தேன் அந்த ஓவியத்தை,
காட்ட வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை நான் காட்டி விட்டேன் என் நண்பனிடம்,
அந்த காகிதத்தில் வரையப்பட்ட ஓவியத்தை அவன் முகத்தில் கண்டேன்
விகார முகத்தோடு
அகோரமாய் சிரித்த முகம்
கூரிய பற்களோடு
சீரிய புயலாய் என்னை தாக்க
கவிதை வரிகளின் படி நான் காணாமல் போய் விட்டேன்!!
கனவு கண்டது போதும் கண் விழித்துக்கொள் என்று ஒரு குரல் கேட்டது
விழித்துப் பார்த்தால் என் அம்மாவின் குரல் அது,,! இப்போதுதான் உணர்ந்தேன் இது அத்தனையும் கனவு என்று
உண்மையில் இப்பொழுதுதான் அந்த ஓவியத்தை வரைய தொடங்கப் போகிறேன்
இப்போ நான் இந்த ஓவியத்தை வரையவா?? இல்லை வேண்டாமா!!?