14
« on: December 16, 2023, 12:22:28 am »
கலை மீது தீரா காதல் கொண்ட
கலைவாணி உன் மேல்
தீரா மையல் கொண்டது என் மனது
அதிகாலையில் நடனம் பயில நீ செல்லும் வழியை...
உன் கூந்தலில் இருக்கும் மல்லிகைப்பூ மணம்
காற்றிலே எனக்கு காட்டிக்கொடுக்க..
அதை பின்தொடர்ந்தே சென்று
நீ நடனமாடும் அழகை கண்டு ரசித்தேன் ..
இசையையும் தாளத்தையும்
அதன் வல்லின மெல்லினங்களையும்
உள்வாங்கி உயிர்த்தெழும் உன் பாதங்களின் நடனம்
என்னை மெய்மறக்க செய்தது.
விழி அசைவும் , உடலசைவும்
நளினமும் என்னை வசியம் செய்ய
கிறங்கி நின்ற அந்த மீள இயலாத தருணத்தை
இன்றும் நினைத்து மகிழ்கிறேன்.
என் மனம் உன்மேல் காதல் கொண்ட
கதையை உனக்கு சொல்ல..
நீயோ உன் நாட்டிய அரங்கேற்றமே
இப்போதைய குறிக்கோளென
என் காதலை தள்ளி வைக்க...
காத்திருப்பதில் தனி சுகம்
என மனதை தேற்றி கொண்டு
இன்றோடு ஓராண்டு ஒரு யுகமாய்
கடந்து போனது.
உன் நினைவிலே உருண்டோடிய
காலங்கள் யாவிலும் உன்னோடு
வாழும் எதிர்காலத்தை எண்ணி
எனை நானே உற்சாகமாக்கிக்கொண்டேன்
உன் பாதம் நோகா பயணத்திற்கு
உன் துணையாக நீ கற்ற கலையும்
நானும் இருக்க
தயக்கம் ஏதும் இன்றி முன்னேறி வா
கசப்பான உன் கடந்தகாலங்களை
மறக்க செய்து வசந்தங்கள் வீசும் எதிர்காலத்தை
அமைத்துக்கொடுப்பது என் பாக்கியமென
உனை ஏந்த உன் வழியில் காத்திருக்கிறேன்..