அம்மாவும் நானும்...
அம்மா,
நீ என்னை கருவில் சுமந்த நொடி முதல் அணைத்துக் கொண்டாய்,
நான் உன்னை உன் இறுதி மூச்சு வரை அணைத்துக் கொண்டேன்...
நான் ஒரு துளி உயிராய் உருவான நொடியிலிருந்து,
அவள் தனக்காக வாழ்வதை நிறுத்தி விட்டாள்,
எனக்காக மட்டும் வாழத் தொடங்கினாள்.
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும்,
அவளின் ஆயிரம் வலிகள் துணையாக இருந்தன...
பத்து மாதங்கள்…
தன் உயிரையே பணயம் வைத்து,
என்னை பொக்கிஷமாக சுமந்தாள்.
நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக,
அவள் எத்தனை முறை அழுதாளோ
அதை யாரும் அறிந்ததில்லை...
என்னை கையில் ஏந்திய நாள் முதல்,
நானே அவளின் உலகமானேன்,
அவளையே அவள் மறந்தாள்.
எனக்காக இரவுகள் முழுவதும் விழித்தாள்.
எனக்காக பசியோடு உறங்கினாள்,
எனக்காக கண்ணீரை மறைத்து சிரித்தாள்,
தனக்குத் தெரியாத உலகத்தையும் கற்றுக்கொண்டாள்,
எனக்குத் தெரிந்த உலகமாக மாற்றிக் கொடுத்தாள்...
“என் மகள் உயர வேண்டும்”
என்ற ஒரே கனவுக்காக,
தன் இளமையையே தியாகம் செய்தாள்,
தன் ஆசைகளை அடக்கம் செய்தாள்,
என் ஆசைகளை உயிராக வளர்த்தாள்.
நான் தோற்ற ஒவ்வொரு முறையும்,
என்னை விட அதிகமாக உடைந்து போனவள் அவள்.
நான் வென்ற ஒவ்வொரு நாளிலும்,
என்னை விட அதிகமாக மகிழ்ந்தவள் அவள்...
நிம்மதி தேடி,
பல முறை அவள் தோளில் சாய்ந்திருக்கிறேன்.
என் கதைகள் அனைத்தையும்,
சலிக்காமல் கேட்ட ஒரே உயிர் அவள் தான்,
என் அம்மா...
என் கண்ணீரின் மொழியை,
வார்த்தையில்லாமல் புரிந்த ஒரே இதயம்,
அம்மாவின் இதயம்...
நான் வாழ்வில் உயர வேண்டும் என்று,
தினமும் இறைவனிடம் வேண்டியவள் அவள்.
இன்று,
நான் உயர்ந்த இடத்தில் நிற்கிறேன்.
ஆனால்,
என்னை அந்த உயரத்திற்கு கொண்டு வந்த அவள்,
என்னை விட்டு உயர்ந்த உலகத்திற்குச் சென்று விட்டாள்.
இப்போது,
அவள் மடியில் தலை வைத்து அழ வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
என் கண்ணீரை துடைக்க,
அவள் கைகள் இல்லை...
“அம்மா” என்று ஒருமுறை அழைக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
அந்த அழைப்புக்கு பதில் சொல்ல,
அவள் குரல் இல்லை...
இன்று என்னிடம் பணம் இருக்கிறது,
புகழ் இருக்கிறது,
வாழ்க்கை இருக்கிறது.
ஆனால்,
அம்மா மட்டும் இல்லை...
அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நினைவும்,
என் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கிறது.
சில இரவுகளில், வானத்தைப் பார்த்து பேசுகிறேன்.
“அம்மா… நீ கேட்கிறாயா?” என்று,
பதில் வருவதில்லை.
ஆனால்,
கண்ணீர் மட்டும் பதிலாக வருகிறது...
இறைவா,
எனக்கு இன்னொரு பிறவி கொடுத்தால்.
இந்த முறை,
அவள் என் அம்மாவாக வேண்டாம்,
நான் அவளுக்கு அம்மாவாகப் பிறக்க வேண்டும்...
அவள் செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும்,
அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும்,
அவள் இழந்த ஒவ்வொரு கனவிற்கும்,
நான் ஈடாக வாழ வேண்டும்.
அவளை என் உயிரைவிட மேலாக நேசிக்க வேண்டும்...
அவள் கடைசி மூச்சு வரை,
என் மடியில் சாய்ந்து,
சிரித்துக்கொண்டே வாழ வைக்க வேண்டும்.
ஏனென்றால்,
இந்த உலகத்தில்,
“அம்மாவின் அன்புக்கு ஈடாக எந்த அன்பும் இல்லை…”
“அம்மாவின் தியாகத்திற்கு ஈடாக எந்த தெய்வமும் இல்லை…”
“அம்மா உயிரோடு இருக்கும் வரை தான் நாம் குழந்தைகள்…”
அம்மா மறைந்த பிறகு,
வயது எவ்வளவு இருந்தாலும்,
நாம் அனாதைகள்தான்...
அம்மா,
நான் உன்னை என்று சுமப்பேனோ,
உன்னை என் இறுதி மூச்சு வரை அணைப்பேனோ...
I miss u Amma, I love u Amma...(Я люблю тебя, мама. Я очень по тебе скучаю.)
இப்படிக்கு
என்றென்றும் உங்கள் அழகி(MA)