Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-053  (Read 314 times)

April 14, 2025, 04:57:10 pm
Read 314 times

RiJiA

கவிதையும் கானமும்-053
« on: April 14, 2025, 04:57:10 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-053


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 14, 2025, 07:37:28 pm by RiJiA »

April 14, 2025, 10:06:51 pm
Reply #1
Re: கவிதையும் கானமும்-053
« Reply #1 on: April 14, 2025, 10:06:51 pm »
 
TITTLE CARD - - >  ஒரு சிறுமி

இது ஒரு போர் களம் அல்ல,
இது ஒரு கனவின் உடைந்த சுவர்,
ஒரு குட்டிச் சிரிப்பு சிதறிய காட்சி.

கையில் மெத்தமான பழைய பொம்மை.

அவள் பேசவில்லை,
அவளது பார்வை பேசுகிறது.

அவளின் கண்கள் நிஜத்துக்கும், கனவுக்கும் இடையே ஒரு பாலம் போடுகின்றன.
அவள் கண்கள் எங்கும் தேடுகின்றன.

கண்ணுக்கு எட்டிய வரை காற்றின் சத்தமே
காற்று ஒரு கதை சொல்வது போல வீசுகிறது,

அவளது முடி சுழல்கிறது,
கண்கள் ஓரம் வெறுமை,
இதழோரம் முணுமுணுக்கும் வார்த்தைகள்,

"சட்டென அந்த காற்று அவளது அமைதியை தத்தெடுத்துக் கொண்டன"

மேகம் தாக்கும் சத்தம் கேட்கிறது

மழை பெய்யத் தொடங்குகிறது.

சிறுமி தன்னிடமிருக்கும் குட்டி பொம்மையால்  தலையை மறைக்க முயல்கிறாள்.

பின்புறம் நகர்கிறாள்

ஒரு வட்டத் தோணியில் தண்ணீர் தேங்கி இருக்க,

இருந்தது ஒரு அழகியல்
தெரிந்தது ஒரு மெய்யியல்

அந்த நீரின் எதிரொளிப்பில்

அம்மாவின் கை..
அப்பாவின் கரம்...
அவ்ளோ நடுவில் தவழ்கிறாள்

சொட்டு சொட்டாக விழும் மழை நீரும் அந்த அழகியலை அழிக்க முடியவில்லை

மழையின் மொழியை  புரிந்த அந்த சிறுமி பேசுகிறாள்,

"மழை என் மேல் விழும் ஒவ்வொரு துளியும்,
என் வாழ்க்கையின் பக்கங்களை வாசிக்கிறது போல இருக்கிறது.

சில பக்கங்கள் அழிந்து விட்டன,

சில இன்னும் வாசிக்கப்படவில்லை…

அம்மா... நீ சொன்னது போல, மழை வரும்போது
துயரம் கழுவிக் கொண்டு விடுமா?


நான் கண்ணீரை மறைக்கிற மழையாய் வாழ்ந்து விட்டேன்.

அப்பா சொன்னாரு,

கனவு காண் அது புதுமையானது

இப்ப கனவே வாழ்க்கையானது"

ஒரு கனவு சிதைந்தது,
ஒரு நிழல் கரைந்தது.
வழி தெரியாத சாலையில்,
வாசல் தெரியாத வீடு போல.


அவள் கையை நீட்டி
நீரில் கையை பதித்து
பொம்மையை மெதுவாக தண்ணீரில் விடுகிறாள்.

அது மிதக்கிறது... மெல்ல மாறுகிறது...
பொம்மை அல்ல...
அவளே...

கனவு ஒரு தடமாக மாற,
நிழல் தான் நிஜமாய் மாற,
சுழலும் உலகம் சொல்லுதே...
சிறுமி," நீ தான் நாளைய ஒளி"
« Last Edit: April 14, 2025, 10:19:49 pm by புகழ் »

April 16, 2025, 02:29:14 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-053
« Reply #2 on: April 16, 2025, 02:29:14 pm »


என் மீதான உங்கள் அன்பு தீர்ந்துவிட்டதோ...


விதியின் விளையாட்டால் ஒற்றை பூ மரமாய் தனித்து நிற்கிறேன்...

நிழலில் இளைப்பாற கிளிகள்
கூட வரவில்லை துணையென...

ஆகாயம் பார்த்த
பூமியாய் வளர்ந்து நிற்க...

இன்னல்கள் ஆயிரம் கண் முன்னே தோன்றி மறைய....

துணையென நான் இருக்கிறேன்
என்று ஒற்றை பொம்மை மட்டுமே என் கையில்....

என் விழியோரம் வழிந்த கண்ணீர்
குளத்தில் பிம்பமொன்று தோன்றியது....

அதில் என் தாய் தந்தையின் கரங்களுக்கு நடுவே நான் நடை பழகிய காட்சி....

அது ஒன்று மட்டுமே இவ்வுலகில் நான் பிறந்ததற்கான சாட்சி....

தென்றல் சில நேரம்
சூறாவளி சில நேரம்...

மாறி மாறி வீசி கொண்டு
இருந்த என் வாழ்வில்...

மேக மோதலில் மின்னி
மறையும் மின்னலை போல...

இன்று என்னைவிட்டு
பிரிந்துவிட்டார்கள் எனது பெற்றோர்கள்..

மேகத்தில் ஒளிந்திருக்கும்
மழைத்துளி போல...

நீங்கள் என்னுடன் என்றும் இருப்பீர்கள்
என்று நம்பினேன்...

நீங்கள் பிரிவது
முன்பே தெரிந்திருந்தால்...

பிறக்கவே
யோசித்திருப்பேன் கொஞ்சம்...

இமைக்கும் விழிகளின்
முன்னே நீங்கள் வராததால்...

நான் உங்களை மறப்பேன்
என்று நினைத்தீர்களோ...

விழிகளின்
பார்வைக்குத்தானே விருந்தில்லை...

உங்கள் நினைவுகள் பதிந்த
என் இதயத்தில் என்றும் விருந்துதான்...

ஆயிரம் கனவுகள்
எனக்கு தந்துவிட்டு...

நீங்கள் பிரிந்து சென்ற
மாயம்தான் என்னவோ...

என்மீதான உங்கள்
அன்பு தீர்ந்துவிட்டதோ...

கன்னத்தின் வழியே
வடிந்து செல்லும்...

என் கண்ணீர் மட்டும்
இன்னும் தீரவில்லை எனக்கு....

என்றும் உங்கள் நட்பின் பிம்பமாய் நான் உங்கள் தமிழ்......

April 19, 2025, 06:47:58 am
Reply #3
Re: கவிதையும் கானமும்-053
« Reply #3 on: April 19, 2025, 06:47:58 am »
Title : எஞ்சிய நம்பிக்கை 💫


வானம் கருகிச் சிவந்த நேரம்,
புகை மண்டலம் சூழ்ந்த ஊரின் ஓரம்.
அழிவின் தாண்டவம் ஆடி ஓய்ந்த பின்னும்,
எஞ்சிய மௌனம் ஒரு பெரும் சோகம்.

உடைந்த சுவர்கள், கூரையிழந்த வீடுகள்,
காலத்தின் கோரப் பற்கள் பதித்த தழும்புகள்.
ஒரு காலத்தில் சிரிப்பும் கும்மாளமும் ஒலித்த இடம்,
இன்று கண்ணீரும் பெருமூச்சும் கேட்கும் களம்.

அந்தப் பாழடைந்த தெருவின் நடுவே,
சிறுமி ஒருத்தி தனித்து நிற்கிறாள் இடுவே.
தோளில் ஒரு கந்தல் பொம்மை சாய்ந்திருக்க,
விழிகளில் இழந்த காலத்தின் நிழல் படர்ந்திருக்க.

அவள் பாதங்களின் கீழே தேங்கி நின்ற நீர்,
கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளின் எதிர்.
அதில் தெரியும் தலைகீழ் உருவங்கள் மூன்றும்,
அவள் இழந்த உறவுகளின் மௌனமான கூக்குரல் போலும்.

அந்த உருவங்களின் கைகள் ஒன்றோடொன்று பின்னி,
ஒரு காலத்தில் இருந்த அன்பின் பிணைப்பைச் சொல்லி.
இப்போது அந்தப் பிணைப்பு அறுந்து போன சோகம்,
சிறு நெஞ்சில் ஒரு ஆறாத ரணமாக ஊறும்.

வானில் இன்னும் கரிய மேகங்கள் திரண்டு,
அச்சத்தின் நிழலை நீட்டிப் பயமுறுத்தக் கூடும்.
சுற்றியுள்ள தீயின் எச்சங்கள் இன்னும் கனன்று,
நினைவுகளின் வலியை அவ்வப்போது உயிர்ப்பிக்கலாம்.

ஆனால் அந்தச் சிறுமியின் கண்களில் ஒரு ஒளி,
தோல்வியடையாத மன உறுதியின் தெளிவு.
இடிபாடுகளின் ஊடே மெல்ல முளைக்கும் புல் போல்,
மீண்டும் ஒரு வாழ்வு மலரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை போல்.

அவள் சின்னஞ்சிறு கைகள் இன்னும் திறந்தே,
அன்பையும் அரவணைப்பையும் ஏந்தத் துடிக்கலாம்.
உடைந்த உலகைச் சேர்த்து மீண்டும் கட்டும் கனவு,
அவள் தூய மனதில் ஆழப்பதிந்து இருக்கலாம்.

இந்தக் கோரமான அழிவின் சாட்சியாய் நிற்கும் அவள்,
வெறும் குழந்தை மட்டுமல்ல, ஒரு வலிமையின் கவிதை.
நாளை விடியும், புதிய உலகம் பிறக்கும் என்ற
உறுதியான நம்பிக்கையின் உயிருள்ள சாவி.

The end 💫

Moral of the kavithai

முடிவில், இந்த கவிதை வெறும் சோகத்தின் பதிவல்ல, மாறாக அந்தச் சிறுமியின் கண்களில் மின்னும் நம்பிக்கையின் கீதம். அவளே புதிய உலகத்திற்கான விடியலின் அடையாளம், இருளுக்குப் பின் ஒளி வரும் என்ற உறுதியின் சின்னம்.

Focus on hope…always peace ✌️
Harry Potter ❤️


Today at 10:15:07 am
Reply #4

iamcvr

Re: கவிதையும் கானமும்-053
« Reply #4 on: Today at 10:15:07 am »
தரையில் என் கால் பெரிதாய் தொட்டதில்லை
அம்மாவின் மடியிலோ,
அப்பாவின் தோளிலோ தான்,
மாறி மாறி கிடந்திருக்கிறேன்.

இப்போது
நான் தரை தொட்டு நிற்கிறேன்.
அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் என
என் உலகத்தை தொலைத்து விட்டு
வேறேதோ உலகத்தில்
தரை தொட்டு நிற்கிறேன்,
தனியாய் நிற்கிறேன்.

என் உலகத்தை பறிக்க இவ்வுலகத்தாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அம்மா சொல்லியிருக்கிறார், யாரோ கடவுளாம், கஸ்டம் வந்தால் பார்த்துக்கொள்ளுவாராம்.
நானும் தேடிக் களைத்துவிட்டேன்
காணவில்லை.

என் முன் பற்றி எரிகிறது உலகம்,
என்னோடு ஒளித்து பிடித்து விளையாடும் என் நண்பர்கள், கடைசியாக ஒளித்தவர்கள் தான், காணவில்லை.
ஊரெல்லாம் எனைத்தூக்கி திரிந்த என் உறவினர்கள்,
இப்போது அவர்களை யாரோ தூக்கிச் செல்கிறார்கள்.

யார் யாரோ சண்டைக்கு
என் வாழ்வை அழிக்கிறார்கள்.
ஓரிரு தலைவர்களுக்குள்
சண்டையென்றால்
அவர்களே முட்டி, மோதி, பலியானாலும் பரவாயில்லை, தீர்வு காணக்கூடாதா?

இங்கே அவர்களெல்லாம்
உயர் பாதுகாப்பில்
இருக்க என்னை போன்றவர்கள் உயிர் மட்டும்
உத்தரவாதம் இல்லாமல் அலைகிறதே

அம்மா சொன்ன கடவுளைப்பற்றி
இங்கு ஒருவரிடம் கேட்டேன்.
அளவிலா சக்தி கொண்டவராம்,
வேண்டியதெல்லாம் கொடுப்பாராம்,
அவரை காணமுடியாதாம்,
உணரமட்டும் தான் முடியுமாம்.

அவராலும் எங்களை காணமுடியாதா?
உணர முடியாதா?
யார் யாரோ தலைவர்களை போல
அவரும் உயர் பாதுகாப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறாரோ?

வாழ்ந்த விதத்தை வைத்து
இறப்பின் பின் நல்லவர்களுக்கு சொர்க்கம், கெட்டவர்களுக்கு நரகம் எல்லாம் கொடுப்பாராம்.
வாழும் போதே அதை கொடுக்கலாமே, வக்கற்ற கடவுள் போலும்.

அவரால் இயலாதென்றால், 
அவ் அனைத்து சக்திகளையும் என்னிடம் கொடுக்க சொல்லுங்கள்.
நான் மக்களோடு மக்களாய் நின்று பார்த்துக்கொள்கிறேன், 
வாழும் போதே சொர்க்கத்தையும்
நகரத்தையும் தருகிறேன்.
அவர் உறங்கட்டும்.