Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-048  (Read 1645 times)

September 30, 2024, 03:32:35 pm
Read 1645 times

RiJiA

கவிதையும் கானமும்-048
« on: September 30, 2024, 03:32:35 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-048


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: October 14, 2024, 06:21:33 pm by RiJiA »

October 01, 2024, 08:57:45 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-048
« Reply #1 on: October 01, 2024, 08:57:45 am »
சுனாமியில் எழும் பேரலைகளைவிட ஆபத்தானது,
தனிமையில் எழும் பெண்ணின் நினைவலைகள்...!

தனிமை என்னும் மெழுகின் வெப்பம்
என்னை சுட்டெரிக்க..!
நிலவொளியாய் உந்தன் நினைவலைகள்
என்னை தழுவ சில வரிகள் என்னில்
உனக்காக..!

வானத்தின் தூரம் போலவே
எனது உயிரின் புன்னகையை
நான் பார்க்கிறேன்...

மெதுவாக எழுந்து நடக்கத்துடிக்கும்
அந்த பாதங்களை நான்
முத்தமிட வேண்டும்....

எனது மனதின் வலிமையை
உடைத்தெறிகிறது அந்த -
ஊமையான நிழல் படம்...

யாராலுமே நிரப்ப முடியாது
என் இருளினை
என் இன்னொரு
உயிரின் புன்னகையைத்தவிர...

அந்த அழகான நினைவுகளை
கடத்திச்செல்லும்
நிமிடங்களுக்கு ஈடாக
இன்னொரு உலகம் செய்தாலும் போதாது

எழுத நினைக்கிறேன்....
உன்னை வாசித்த படியே
நீ என் அருகில் இல்லாத
வலிகளைச்சொல்லி....

என்னைச்சுற்றிய கோடுகளை
உன் நினைவுகள் நிரப்புகிறது....

உன்னைச்சேரும் நாட்களை எண்ணியே
என் இளமை இறக்கிறது...

யாராலுமே உணர முடியாத
ரணங்களை என் உயிர்
சுமந்து செல்கிறது.....

இது ஒரு கொடூரமான
மௌனப்பயணம்
உன்னை அடையும் நாள் வரைக்கும்....

என் விழிகளில்
விழுந்த நீ,
ஏன் விலகிச்செல்ல மறுத்தாய் ???
ஏன் விதையாய் முளைத்தாய் ???

தினம் உனைத்தாங்க நினைக்கிறது மனசு
அதே கணம் உன் அருகாமையை
இழந்து தவிக்கிறது உசுரு....

என் மரணத்தை வென்றவன் நீ...
என் இளமையை சுண்டி இழுத்தவன் நீ...
என் விதியினிலே விதையாய் வீழ்ந்தவனும் நீ....

காற்றெல்லாம் தேடுகிறேன்
என் காதோரம் உன் -
குரலை காணவில்லை..

காதலனானாய்,
மனாளனானாய்,
என் குழந்தையும் நீயானாய்
உன்னோடு நான் வாழாமலே..

தனிமை என் மீது சரிந்து விழுகிறது
நான் சாய்ந்து கொள்வதெப்போது
உன் மார்பின் மேலே...?
« Last Edit: October 01, 2024, 09:18:36 am by Limat »

October 01, 2024, 09:04:24 pm
Reply #2
Re: கவிதையும் கானமும்-048
« Reply #2 on: October 01, 2024, 09:04:24 pm »
தனிமை

சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம்

தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட

தனிமையில் கடக்கும் நிமிடங்கள்

சிலருக்கு  சிறந்ததோர்  அறிவினை கொடுக்கும்

தனிமை சிலருக்கு  நரகத்தினை காட்டும்

தனிமையில்  சாத்தானும் ஞானம் பெறுகின்றான்

தனிமையில்  புத்தனும் சாத்தான் ஆகின்றான்.!

தனிமை விந்தையானது 

ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு 

 தனிமையால்  இரு உறவுகள் பிறிவதும் உண்டு

தனிமை படைப்புகளின் பிறப்பிடம்

தனிமை அழிவின் ஆரம்பமும் கூட..,


இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்.,

தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும்
கசந்திடச்செய்யும்.,

நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்....

தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன்

நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என

என்னை அணைத்து கொண்டது தனிமை.,

எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி

கொண்டேன் உன்னை  என் இனிய தனிமையே..

தனிமை இருள் அல்ல

தனிமையை நேசிக்க கற்றுகொண்டால்


தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்..

தனிமையை கையாள கற்றுக்கொண்டால்

நமனை கண்டாலும் போடா என்பாய்..,

தனிமையில் நொருங்கி போகாதே

தனிமையை உனதாக்கிகொள்

படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான்


மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட

தனிமைவிரும்பியே..




Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன்


நன்றிகள் பல..!!!!!



உங்கள் நண்பன்


Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳















October 05, 2024, 12:04:11 pm
Reply #3

Thendral

Re: கவிதையும் கானமும்-048
« Reply #3 on: October 05, 2024, 12:04:11 pm »
❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️

என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது...
வருவாயோ அன்பனே !!!

தனிமை ஒரு வரம் என இருந்தேன்
இன்று என்நிலை அறியும் வரை
தனிமை எனக்கான அரண்
என்னிடம் என்னை உணர்த்தும் வரை
தனிமையில் நான் உன்னை
நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை
 உன்னை தேடவும் இல்லை
என பொய் உரைத்தேன்
ஆம் உன்னை தேடவும் இல்லை
உணரவும் இல்லை...
என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது....
வருவாயோ அன்பனே !!!

அழகான நாட்கள் தந்த நினைவுகள்
வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில்
தொலைத்த உன்னை தேடினேன்...
என் இருள் போக்க வருவாயோ
என்னுடன் தான் சேர்வாயோ ....
என் தனிமை தீரும் காலம் எப்பொழுது ....
வருவாயோ அன்பனே!!!

தனிமை சோகமா வரமா ???
சோகமே வரமாக ஆனதோ !!!
 என் நிலை மாறும் ...
என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ ....
அந்த நாளும் என்று வருமோ
என் தனிமை சாபம் தீர
உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது...
வருவாயோ அன்பனே !!!

வழி துணையாய் நீ வேண்டும்
நம் வாழ்வும் சீராகும்
உன் விழியில் ஒளி கண்டேன்
நம் வாழ்வின்  வழி உணர்தேன்
தனிமை துயர் துடைத்தாய்
என் தந்தையுமாய்  ஆனாய் நீ
நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி
என் இருள் போக்க வருவாயோ
 என்னுடன் தான் சேர்வையோ
 என் தனிமை தீரும் காலம் எப்பொழுது ....
வருவாயோ அன்பனே !!!

அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ
நான் தொலைத்த நீயும்
 எனை தழுவிய தனிமையும்
நீ அறியும் காலம் எப்பொழுது .....
வருவாயோ அன்பனே!!!

நீ எனை சேரும் காலம் எப்பொழுது....
வருவாயோ அன்பனே !!!
என்றும் தனிமையில்
❣️தென்றல்❣️

October 05, 2024, 07:46:18 pm
Reply #4

Jasvi

Re: கவிதையும் கானமும்-048
« Reply #4 on: October 05, 2024, 07:46:18 pm »
ஒலிகள் நிறைந்த உலகில் உன்னுடன் நான் செலவிடும் நேரம்....
சில்லென்று தென்றல் வீச... காய்ந்து உதிர்ந்த இலைகள் கூட நடனமாடுவது போல் தெரிகிறது.......
விட்டுவிட்டு எரியும் மின்விளக்குக் கூட மின்மினிப்பூச்சி போல் தெரிகிறது....
புரியவில்லையா, தனிமையே உன்னால் நான் ரசனைமிக்கவள் ஆகிறேன்....
பலரும் அறிவதில்லை... பொய்யான உறவு தரும் வலிக்கு நீ துணையாய் வந்து வாழ்க்கையின் நிஜத்தை புரிய வைப்பது......
உன்னுடன் வாழ பழகி விட்டால் வாழ்க்கை இனிமையே.....
சொர்க்கம் தான்.... நீயும் இசையும் என்னுடன் சேர்ந்தால்....
முடிவில்,என்னை நான் ரசிக்கவும்.. .
ஏன்.. என் கற்பனையில் உன்னைப் பற்றி கவிதையை முயற்சித்து.. என் பேனாவிற்கு குரல் கொடுத்ததும் உன்னால்தான்....
தனிமையே உன் வழியில்தான் கேட்கிறேன் என் இதயத்தின் குரலை....
உன் வரவில்தான் அறிந்தேன், என் தனி மனவலிமையை..
என் காதலனாக நீ இருக்க ஆசை... காரணம், என் இறுதிக் கதிரவன் மறையும் வரை நீங்காத துணையாக நீ இருப்பாய்....
உன்னை இதுவரை ரசித்த எனக்கு, உன்னிடம் ஒரு வேண்டுகோள்....
உன்னிடம் விரும்புவது ஆறுதல் தான்...
காயங்களின் வலி அல்ல.. என்றும்,
எனக்கு ஆறுதலைக் கொடு....
வெறுமையை கொடுத்து விடாதே....
                                                         இப்படிக்கு, 
                                     தனிமையின் காதலி ஜாஸ்வி♥️

October 05, 2024, 08:52:28 pm
Reply #5

Ami

Re: கவிதையும் கானமும்-048
« Reply #5 on: October 05, 2024, 08:52:28 pm »
வெளிச்ச கீற்றுகள்
உள்ளடங்கும் வேளையில்
தனிமையின் நாக்குகள்
அடங்காத ஜூவாலையென
உள்ளிருந்து எழுந்து
விலக்க முடியா
வலையென பின்னிக் கொள்கிறது.
எல்லோரும் இருந்தும் யாருமற்ற
நிலையில்
பற்றற்று அமர்ந்திருக்கிறேன்.
தனிமை இன்னும் தீவிரமாய்
அணைத்துக் கொள்கிறது.

சில சொற்களின் சூடுகள்,
துண்டித்துக் கொண்ட
சில அன்பின் எச்சங்கள்,
தட்டிவிடப்பட்ட வெறுப்புகள்,
அலைகழிக்கப்பட்ட உணர்வுகள்
ஒன்றின் பின் ஒன்றென
மன அடுக்குகளின் மேல் எழுந்து
மீள முடியா
நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை போல
உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது.

கடிகார முட்களை பின்னோக்கி திருப்பி விளையாடும் விளையாட்டென
காலத்தை முதலிருந்து வாழ்ந்திட முடியாதா
என பெரு ஏக்கம்
காற்றை துழவுகிறது.
இல்லை,
என் காலத்தை இனி திருப்ப முடியாது
கடக்க முடியாத தூரங்களை
கடந்து வந்துவிட்டேன்
இது ஒருவழி பாதை என
நிதர்சனம் புரியும் முன்
ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது.
காலத்தின் மீது எந்தவொரு கோபமும் எனக்கில்லை.

யார் மீதும் கோபமில்லை
என நினைத்துக்கொண்டாலும்
என் மீதே இருக்கும் கோபத்தை
எங்ஙனம் மறைத்துக் கொள்வது?
இந்த கணம் பற்றிக் கொள்ள
ஒரு துடுப்பு போதும் தான்
எல்லாருக்கும் கை கொடுக்கும்
துடுப்பு கூட
என்னை மட்டும் ஏன் தத்தளிக்க வைக்கிறது?
துடுப்பின் மீதும் எனக்கு கோபமில்லை
பற்றிக் கொள்ள எனக்கு தான்
தெரிந்திருக்கவில்லை.

இருளை விட கொடிய
இத்தனிமையின் தீண்டலில்
இந்த இரவில் எவ்வளவு பேர்
உத்திரத்து காற்றாடியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருகிறார்கள்?
கேட்பாரற்று அநாதரவாய் அலையும்
நாய்க் குட்டியை போல்
தத்தளிக்கும் மனதை எதை கொண்டு நான் ஆற்றுப்படுத்துவது?
ஆதூரமாய் மெல்லிதான காற்றும்,
எங்கோ தூரமாய் ஒலிக்கும் மெல்லிய இசையும்,
சாளரங்களை தாண்டி வீசும்
நிலவின் குளுமையும்,
மெழுகுவர்த்தியின்
இச்சிறு வெளிச்ச கீற்றும்
படர்ந்துவிடாதா அத்தனை பேருக்கும்?


October 06, 2024, 10:29:52 am
Reply #6

Shruthi

Re: கவிதையும் கானமும்-048
« Reply #6 on: October 06, 2024, 10:29:52 am »
தனிமை...!!!

தனிமை  நீயே  ஏற்று  கொண்டால் உன் வாழ்கையில்  அது  புது விதமான  ஒளி...
அதுவே  உனக்கு  பிறர்  கொடுத்தால் உன்  வாழ்கையில்  தாங்கவே  முடியாத ஒரு விதமான  வலி....!!!

ஏன் இப்படி  தனியா  குறுகி  உட்கார்ந்து  இருக்கிற?
உனக்கு  என்னத்தான்  பிரச்சனை?
எதுக்கு  இந்த  சோகம்?

இப்படி  ஆறுதலா  நாலு  வார்த்த  பேச  ஒருத்தரும்  இல்ல...
அது  நெனச்சு  வருத்ததுல  இந்த  புள்ள...

அந்த  மெழுகுவர்த்தியை பார்...
இருட்டில்  இருக்கும் உனக்கு
தன்னையே  உருக்கி  கொண்டு  ஒளியை கொடுக்க  வில்லையா?

உலகிற்கே  வெளிச்சம்  கொடுக்கும்  நிலா இன்று  உன்னை  காண  உன் வீட்டு ஜன்னலில்  எட்டி  பார்ப்பது உனக்கு தான்  தெரியவில்லையா....

சோர்ந்து போகும்  நேரம் நீ  சாய்ந்து கொள்ள மடியாக உன்  வீட்டு சுவரும் உன்  தோழி  தானே? 
அது இன்னுமா  உனக்கு புரியவில்லை?

இல்லாதவர்களை நினைத்து நீயோ தனிமையில்...
உன்னையே வருத்தி  கொள்ளாதே இந்த  இளமையில்....

தனிமையும்  ஒரு சுகமான காலம்தான்...!!!!
அதில் நீயும்  கற்றுக் கொள்ளவாய் புதிய பாடம்தான்...!!!!

தனிமை எனும்  என்னை  தனித்து  விடாதே...
தங்கம் போல தாங்குவேன் என்னவளே...
தலை சாய்த்து தூங்க வா என் மடி  மேலே....

இந்த நொடியில்...
இந்த  நொடியில் தனிமை  எனும்  போதையை அனுபவித்துக்கொள்....
மீண்டும்  ஒரு  பிறப்பு  தனிமைக்கு கிடைத்தால்  உன்  அதிர்ஷ்டம்  என்று  தெரிந்துக்கொள்...

இப்படிக்கு  உன்னை  நேசிக்கும் உன்னை மட்டுமே  நேசிக்கும் நான்தான்   தனிமை...!!!!

October 06, 2024, 12:12:58 pm
Reply #7

Wings

Re: கவிதையும் கானமும்-048
« Reply #7 on: October 06, 2024, 12:12:58 pm »
அழகானவள் அவள்
வலி மிகுந்த குழப்பத்தில் இருந்தால் அவள்
சில சமயங்களில் பித்துப்பிடித்தவள்
போலும் இருந்தாள்
கட்டுப்படுத்த முடியாத எண்ணவோட்டங்கள் ஆக்கிரமிக்கும்பொழுது
சில விஷயங்களை சொல்லாமல்
விடுவதே உகந்தது.
உடைந்து விழும் அவளின் கண்ணீர்
சில நேரங்களில் கருமை அடர்ந்திருந்தது
சில நேரங்களில் பிரகாசமான சிவப்பாக இருந்தது

.

அவளின்  துளி கண்ணீரும்
வாதை நிறைந்தது.
மீட்டெடுக்க முடியாத தொலைந்த  நம்பிக்கைகளை
அவளின் கண்ணீர் கதைகளாக கூறியது.

விலகி நடக்கும்பொழுது ஒவ்வொரு தருணமும்
அவளின் வலி பேசியது.
அவளின் பொய்களின் பின்
மறைந்திருக்கும்
உண்மையின் தாத்பரியம் எனக்கு விளங்கியதே இல்லை.
உள்ளத்தின் உள்ளே பொதிந்திருக்கும் அவளின்
வலிகளை யாரும் அறிந்ததுமில்லை.
யாரும் கண்டுக்கொள்ள முடியாத
மனதின் இருண்மையில் ஆழ்ந்திருக்கும்
அவளின் ரகசியம் தான் என்ன?

அவளின் ஒவ்வொரு பாடலும் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
வலி மிகுந்த கண்ணீருடன்
சோக பாவனையில்
கால்களை ஆட்டியபடி மீண்டுமொரு
தாலாட்டை பாடுகிறாள்.
உலகத்துடன் போராடி தோற்ற அவளுக்கு,
அவளின் இருப்பை நியாயப்படுத்தும்
ஒரு பிரியமானவராவது இருக்கட்டும்.

அவளது இதயத்தில் நிபந்தனையற்ற அன்பு இருந்த போதிலும்
 அவளுக்கு ஒரு அன்பான தொடக்கம் அமைய பெறவில்லை !!!
அவளின் காதல்
மெய்யானதும் உணர்ச்சிப்பூர்வமானதும்.
அவள்சாத்தியமான எல்லா வழிகளிலும்
தவறாகவே கையாளப்பட்டிருக்கிறாள்.
கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறாள்,
இருந்தும் அவளது காதல்
மெய்யானதும், உணர்ச்சிப்பூர்வமானதும்.

அவள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாள்,
அவளது ஆழமான இருண்ட கண்களில் கண்ணீர்
திரண்டு நின்றிருந்தது.
ஆனால் அவளின் துக்கமான அழுகையை யாரும் கேட்கவில்லை ...
ஆம் யாருமே கேட்கவில்லை !!!!