Advanced Search

Author Topic: AnJaLi கதைகள்  (Read 78066 times)

March 24, 2019, 09:38:30 am
Reply #15

AnJaLi

Re: ராஜுவின் கதை
« Reply #15 on: March 24, 2019, 09:38:30 am »
ராஜுவின் கதை - இறுதி பாகம்


முதல் அண்ணன் காலமாகிவிட மீதம் ராஜுவையும் சேர்த்து நான்கு பேர் சகோதரர்கள் ஒருவருக்கும் அப்போது திருமணமாகவில்லை. அப்போது தொலைபேசி அலுவலகம் தனியார் நிருவனமாக்கப்படவில்லை, ராஜுவின் சகோதரரில் ராஜுவிற்கு மூத்த சகோதரர் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் அரசு பணியில் இருந்து வந்தார், ராஜுவின் மூத்த சகோதரர் வேலையை விட்டு விடாதே, திரைப்பட தயாரிப்பிலோ இயக்குனராகவோ கிருஷ்ணன் முன்னுக்கு கொண்டு வருவார் என்கின்ற உன் நம்பிக்கையை நம்பி அரசு பணியை விட்டு விடாதே என்று எடுத்துக் கூறியுள்ளார், ராஜுவின் இரண்டு தம்பிகளில் மூத்தவர் ரயில்வேயில் எழுத்தராக பணி செய்து வந்தார், [கடைசி தம்பியும் பிற்காலத்தில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார்]. அவருக்கு அப்போதைய தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேளாளர் மிகவும் நெருக்கம் என்பதால் ரயில்வேயில் பணியமர்த்திவிடுவதாக ராஜுவிடம் பல முறை சொல்லியும் இயக்குநர் கிரிஷ்ணரின் வாக்குறுதியின் மீதிருந்த நம்பிக்கையால் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் திரைப்பட மோகத்தினால் இழுக்கப்பட்டு கிருஷ்ணனே கதி என்று நம்பிக்கிடந்தார் ராசு.

ஆனால் நம்பிக்கை எந்த அளவிற்கு உதவி செய்தது, கிருஷ்ணர் தனக்கிருந்த நண்பரும் தொழில் பார்ட்னருமான பஞ்சுவிடம் பீம்சிங்கை அறிமுகப்படுத்தினார், பீம்சிங் எங்கிருந்து திடீரென்று வந்தார், அவரும் அடுத்த தெருவில் வசித்தவர், பீம்சிங் ராசுவைப்போல இல்லை, தொழில் நுணுக்கத்தை பிடித்துக்கொண்டு கிருஷ்ணனின் உதவியுடன் திரைப்பட இயக்குனராகிவிட்டார், இயக்குனராவதற்கு உதவிய கிருஷ்ணன் பீம்சிங்கை தனது தங்கைக்கு திருமணம் முடித்து வைத்து சொந்தமாக்கிவிட்டார். ராஜுவின் நிலை என்ன, கேள்விக்குறிதான். பஞ்சுவும் பீம்சிங்கும் [பீம்சிங்கின் தாயார் தெலுங்கு பிராமணர்] பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணரின் தகப்பனாரும் பிராமணர், ஆக பிராமணர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்களை முன்னேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக மாறிப் போயினர். ராசு அடிப்படையில் கிறிஸ்த்துவர், அவரை உயர்விற்கு கொண்டுவந்து அதனால் அவர்களுக்கு ஆகப்போவது என்ன என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஏமாளி ராசு, பிழைக்கத்தெரியாதவர், அப்பாவி அப்போதும் இவற்றையெல்லாம் உணரவில்லை, கிருஷ்ணர் தனக்கு நிச்சயம் உதவிவிடுவார் என்று அவரது வாக்கை நம்பி காலமெல்லாம் காத்திருந்தார், திரு வாசு அவர்களால் தயாரிக்கப்போகின்ற திரைப்படம் பெற்றால்தான் பிள்ளையா, அதில் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும் அதன் மூலம் அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்று தருவதாக இறுதியாக வாக்களித்தார் ராஜுவிடம் கிருஷ்ணன், ஆனால் நடந்தது என்ன, யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஆர்.ராதா அவர்கள் திரு. எம்.ஜி.ஆரை சுட்டுவிட பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் நன்றாக ஓடி வசூலைக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பை அத்துடன் இழந்துவிட்டார். இதற்கிடையில் ராசு வேறு அரசுபணிகளில் சேர்ந்தார், ஆனால் ஒவ்வொரு முறை கிருஷ்ணன் ஏதோ ஒருதிரைப்படத்தை இயக்குவதை அறிந்து அந்த வேலையை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் இயக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்.

மனிதர்கள் மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பானது, சகோதரர்கள் எல்லோரும் குடும்பஸ்த்தர்களாகி விட்டனர், ராஜுவின் நிலைமையைப் கேட்கவா வேண்டும், ராசுவை நம்பி ஒரு பெண் வாழ்க்கை பட்டார், குழந்தையும் ஆனது, காப்பாற்ற இயலாமல் குடும்பத்தில் கஷ்டம், கிருஷ்ணன் என்ன செய்தார், எல்லா பொறுப்பையும் பஞ்சுவின் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார், கிருஷ்ணரின் குடும்பத்தினரின் பார்வையில் ராசு எடுபிடி, ராசு கிருஷ்ணருக்கு பெண்களைக் கூட கூட்டி வந்து கொடுப்பவன் என்கின்ற எண்ணம். ராஜுவும் கிருஷ்ணரும் சந்திப்பது அவரது (பஞ்சு உட்பட) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பது இல்லை,

ஆனால் நடந்தது என்ன கிருஷ்ணன் தனக்கொரு வைப்பாட்டியை தானே தேடிக்கொண்டார், ஆனால் அவர்கள் நினைத்தது அந்த வைப்பாட்டியையும் ராஜுதான் கூட்டி வைத்தார் என்று, ஆனால் வைப்பாட்டி என்ன செய்தார் அந்த குடும்பம் ராசுவைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது அறியாதவர், உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதைப்போல, ராஜுவிற்கு கிருஷ்ணன் செய்யவிருந்த உதவிகளையெல்லாம் தன்வசம் திருப்பிக்கொண்டுவிட்டார், பிழைக்கத் தெரிந்த பெண். அப்போதும் ராஜுவிற்கு கிருஷ்ணரின் மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் எவ்விதத்திலும் குறையவே இல்லை என்பதுதான் ராஜுவின் குடும்பத்தாற்க்கு ஆச்சரியமான விஷயம், இப்படியும் ஒருவன் உலகில் இருப்பானா, என்று கேட்கின்ற அளவிற்கு உலகின் தில்லு முல்லுகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தார் ராசு.

வாழ்க்கையில் கஷ்டங்களின் எல்லைக்கே வந்தாகிவிட்டது, இனியும் படுவதற்கும் சுமப்பதற்கும் உலகில் வேறொரு கஷ்டம் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ராசு, அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவது, கலைஞரை உங்களுக்கு தெரியுமே சென்று பாருங்களேன் ஏதாவது உதவி செய்வார், (சிவாஜி) கணேசனை உங்களுக்கு தெரியுமே போய் பார்க்கக் கூடாதா ஏதாவது உதவி செய்வார், இப்படி ராஜுவைப் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர்களும் மற்றவர்களும் பலமுறை கூறுவதுண்டு, எத்தனையோ அன்றைய பிரபலங்களை ராஜுவிற்கு தெரிந்திருந்தும் ராசு நம்பியது இயக்குநர் கிருஷ்ணரை மட்டுமே கடைசிவரையில், வாக்குறுதி கொடுப்பவர்கள் மறந்துவிடுவது வாடிக்கைதானே, கிருஷ்ணரும் அப்படித்தானோ அல்லது அவரை சுற்றி இருந்தவர்களின் தந்திரமோ, உண்மைகள் எப்போதும் மவுனம் சாதிக்கும் அல்லவா, ஆனால் கிருஷ்ணர் கடைசிவரையில் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தன்னையே நம்பி காலமெல்லாம் காத்துக் கிடந்த ராஜுவிற்கு செய்யவேயில்லை என்பது வேதனை ஏற்ப்படுத்தும் செய்தி. ஆனால் ராஜுவின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவே இல்லை. வறுமை, வியாதி, பசி, பட்டினி, பிச்சை, குடிசை, வயோதிகம், மரணம் இவை எல்லாம் ராஜுவின் வாழ்க்கையை தலை கீழாய் மாற்றி போட்ட போதும் அந்த பாழாய்ப் போன 'நட்பு, நேர்மை, நம்பிக்கை, நண்பர்கள்' என்கின்றவைகளை ராசு கட்டிகாத்தவிதம், மதித்தவிதம் என் கண்களில் என்றும் தீராத கண்ணீரையும் மனதினில் ஆறாத் துயரத்தை கொடுத்துவிட்டது.

ராஜுவிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பு என் உயிருள்ளவரை என்றென்றும் உண்டு, அவரது நேர்மை பண்பு, வறுமையிலும் உதவி என்று வலியோரை நம்பி போகாமல் வறுமையைக் கூட தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி ஏற்றுக்கொண்டு பொருமையாய் வாழ்ந்த விதம் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாத ரணங்கள். அன்னாரின் ஆத்மாவிற்கு என் அஞ்சலிகள் என்றும் உரித்தாகுக

March 24, 2019, 06:45:53 pm
Reply #16

AnJaLi

வா ...... சுகி !!
« Reply #16 on: March 24, 2019, 06:45:53 pm »
கருத்து தெரிந்த நாள் முதலாய் சுகம் என்பதற்கு பொருள் சாப்பிட்டு விட்டு பின்னர் நன்றாக உறங்குவது, ஆனால் அதற்கான சந்தர்பங்கள் கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது, வாசுகி இளம் வயது படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு காரணம் அவள் தாய்க்கு இளம் வயது முதலே சயரோகம், கவனிப்பாரற்ற நிலையில் வளரவேண்டிய நிர்பந்தகளுக்கு உள்ளானவள். அழகு இருந்த அளவிற்கு திறமைகள் வாசுகியிடம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது. சமையலறை வேலை வீட்டு வேலை என எல்லா வேலைகளையும் பனிரெண்டு வயது முதல் செய்வதற்கு பழக ஆரம்பித்து வயதிற்கு வந்து ஓரிரு வருடங்களில் படிப்பை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு வீட்டு வேலைகளில் ஐக்கியமானவள், பதினாறு வயதில் அத்தை மகன் சாமாவிற்கு திருமணமும் முடித்து வைத்தனர்,

சாமாவிற்க்கும் வாசுகிக்கும் சரியாக நான்கு வயது வித்தியாசம், கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் சாமாவை அமாஞ்சி என்று கூப்பிடுவது வழக்கம், சிறு வயது முதலே இருவரும் நன்கு பழகி வளர்ந்ததால் கணவன் மனைவி என்ற எண்ணமின்றி திருமணத்தையும் ஒருவித சம்பிரதாயமாகவே நினைத்தனர், குழந்தையின்றி பல வருடங்களாகியும் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் அல்லது அறியாதவர்களாக வாழ்ந்து வந்தனர், சாமாவின் தாய்க்கு சந்தேகம் ஏற்படத் துவங்கியது, சாடைமாடையாக வாசுகியிடம் இதைப் பற்றி விசாரித்தாலும் வாசுகியிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை.

வாசுகி அவளது தாயை கவனித்துக் கொள்வதற்கு அவளது தாய் வீட்டிற்க்குச் சென்று பல மாதங்கள் தங்கி விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்தது, வாசுகியின் வீட்டிலிருந்த கறவை பசுக்கள் இரண்டை கவனித்துகொள்வதற்க்கு கிராமத்திலிருக்கும் கால்நடை மருத்துவர் அவர்கள் வீட்டிற்கு வந்து போவது வழக்கம், வாசுகியின் இளம் வயதும் அழகும் கால்நடை மருத்துவர் கோபியை கவர்ந்திருந்தது, ஏதாவது காரணங்கள் கற்ப்பித்து வாசுகியை அடிக்கடி அவள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பதை வழக்கமாக்கினான் கோபி,

வாசுகியின் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் அருகிலிருந்த பட்டினத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர், வாசுகி வீட்டிலிருந்த வேலைகளை கவனித்துகொண்டு தனியே இருக்கும் சூழல் அதிகரித்தது, கோபியின் வருகைக்காக வாசுகி காத்திருக்கத் துவங்கினாள், தனது மாற்றத்தின் அர்த்தம் விளங்காமலேயே கோபியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள், இருவரும் உடலுறவுகொள்ளும் அளவிற்கு அவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது, வாசுகி கருவுற்றிருப்பதையறிந்த அவளது அத்தைக்கு மிகவும் சந்தோசம், தன் மகன் சாமாவிடம் சொல்லி அடிக்கடி வாசுகியை சென்று பார்த்துவர சொன்னதன் விளைவு தான் வாசுகி கருவுற்றிருக்க காரணம் என்று எண்ணி சந்தோஷமடைந்தாள்.

வாசுகியின் தாய் சிறிது நாட்களில் இறந்துவிட வாசுகி நிரந்தரமாக அவளது வீட்டில் தங்கி விட்டாள், சாமாவும் வாசுகியுடனே அவளது வீட்டில் தங்கிவிட்டான். கோபி வந்து போவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வந்து போனான், பிரசவத்திற்கு உதவுவதற்கு சாமாவின் தாய் வாசுகியுடன் வந்து தங்கினாள். அங்கு அடிக்கடி வந்து போகும் கோபியையும் அவனுடன் வாசுகியின் நெருக்கமான நடவடிக்கைகளும் சாமாவின் தாய்க்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. சாமாவிடமும் வாசுகியிடமும் இதைப்பற்றி பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஒருநாள் கோபி வீட்டிற்கு வந்தபோது சாமாவும் வாசுகியும் மருத்துவரிடம் சென்றிருந்தனர், அப்போது சாமாவின் தாய் கோபியிடம் வாசுகியுடன் அவனது நெருக்கம் தவறானது என்று சொல்லி இனி அவன் அந்த நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும் கோபத்துடன் எச்சரிக்கை செய்தாள். ஆனால் கோபி அங்கு வருவதும் வாசுகியும் கோபியும் நெருங்கி பழகுவதிலும் எந்தவித மாற்றமும் காண முடியாமல் சாமாவிடம் இதைப்பற்றி சொல்லி கோபமடைந்தாள், அதை கேட்ட சாமாவிற்கு ஆச்சரியம் ஏற்ப்படவில்லை மாறாக அவன் அதைப் பற்றி தனக்கு முன்பே தெரியும் என்பதை தன் தாயிடம் தெரிவிக்கும் சூழல் ஏற்ப்பட்டது, தனக்கும் வாசுகிக்கும் காம உணர்வுகள் ஏற்படாமல் போனதற்கு காரணம் இருவரும் சிறுவயதிலிருந்து அண்ணன் தங்கையைப்போல பழகியதுதான் காரணம் என்று சொன்னவுடன் அவன் தாய்க்கு இனம் புரியாத துக்கம், அழுதுகொண்டே தனது துணிகளை எடுத்துக்கொண்டு வாசுகியிடம் கூட சொல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி தன் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.

வாசுகிக்கு வேறு துணையின்றி தனியே இருந்ததால் சாமா அவளுக்கு உதவியாக இருந்து வந்தான், ஆனால் குழந்தைப் பிறந்த சில மாதங்களில் சாமாவும் தன் வீட்டிற்குத் திரும்பியவன் மறுபடியும் வாசுகியை பார்க்க அவளது வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டான், வாசுகி தன் குழந்தை, கால்நடை மருத்துவர் கோபியுடன் பட்டினத்தில் வாழ்ந்து வந்தாள். சாமாவிற்கு வேறு திருமணம் செய்வித்து தாம்பத்ய நிறைவுடன் வாழ்கிறான்.

March 24, 2019, 06:59:05 pm
Reply #17

AnJaLi

இளையத் தலைமுறை
« Reply #17 on: March 24, 2019, 06:59:05 pm »
காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களது படிப்பிற்கும் பெற்றோருக்கும் கொடுக்கத்தவரும் இளைய சமுதாயத்தினர் மீது பேராசிரியர் சுரேஷுக்கு எப்போதுமே தீராத வெறுப்பு, தனது ஒரே மகன் விக்ரமும் அவனுடைய நண்பர்கள் கூட்டமும் கூட இதே வகையைச் சார்ந்தவர்கள் தான், சுரேஷ் எப்போதும் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்ப்பதுண்டு சுரேஷின் தகப்பனாருக்கு அரிசி மொத்த வியாபாரம், பள்ளி விடுமுறை நாட்களில், சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது தகப்பனின் அரிசிமண்டிக்கு சென்று தகப்பனாருக்கு உதவி செய்ய முயலும் போதெல்லாம் அவனது தகப்பனார் 'இந்த வேலையெல்லாம் நீ கத்துகிட்டு வருங்காலத்துல கஷ்ட பட வேண்டாம், நிறைய படிச்சிட்டு பெரிய உத்தியோகம் பார்க்கணும்' என்று சொல்லுவார்.

பள்ளிக் காதலோ கல்லூரிக் காதலோ சுரேஷை பாதிக்கவில்லை, படிப்பில் படுகெட்டிக்காரன், அவனது நண்பன் ஆனந்தும் சுரேஷைப் போன்ற விருப்பு வெறுப்பு என்று எல்லா குணங்களிலும் மிகவும் ஒத்து போகும் நண்பன், இருவரும் சேர்ந்தே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தனர், வேலை கிடைத்த போது இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்தது சந்தர்ப்பம் கிடைத்த போது அடிக்கடி சந்தித்தும் வந்தனர், சுரேஷ் வட நாட்டிலிருந்த பல்கலைகழகத்தில் வேலை மாற்றிக்கொண்டு சென்ற பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பது இயலாமல் போனது.

தன் மகனின் நான்கு வருட படிப்பு முடிந்தவுடன் தனது நண்பன் ஆனந்த் பணிபுரியும் கல்லூரிக்கு விண்ணப்பித்து பேராசிரியராக நியமனம் கிடைத்த பின் ஆனந்தை பார்த்து தானும் அதே கல்லூரியில் பணி புரியப் போகும் சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு நண்பனின் வீட்டிற்கு வந்தான் சுரேஷ். சுரேஷ் ஆனந்தின் வீட்டிற்கு வரும்போது வழியில் அதிக வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் தனது உயிர் நண்பன் ஆனந்த் தன்னை கண்டதும் சந்தோஷத்தில் மகிழ்ந்து விடுவான் என்று நினைத்து கொண்டு அவனது வீட்டையடைந்தான், அச்சமயம் ஆனந்த் அவனது தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான், ஆனந்தின் முகத்தில் சோக இருள், சற்றும் சிரிப்பே இல்லாத வெளிறிய முகம் கண்ட போது உடல் நலமின்மையால் ஆனந்தின் முகம் மாருபட்டுள்ளதோ என்று நினைத்து உடல் நலமில்லையா என்றான் சுரேஷ். அதற்க்கு பதிலேதும் கூறாத நண்பனின் மௌனம் சுரேஷுக்கு வியப்பை கொடுத்தது.

தோட்டத்திலிருந்த நாற்காலிகளில் அமர்ந்த இருவருக்கும் ஆனந்தின் பழைய சமையற்காரன் முருகன் தேநீர் எடுத்து வந்தான், தேநீரை வைத்த முருகன் சுரேஷைப் பார்த்து 'ஐயா, சொவ்கியங்களா, வீட்ல எல்லாரும் சவுக்கியமா' என்றான், 'நாங்கள் சவுக்கியம் முருகா நீயும் உன் வீட்டாரும் சவுக்கியமா' என்று பதிலுக்கு விசாரித்தான் சுரேஷ். திரும்பிச் செல்ல இருந்த முருகனிடம் 'ஐயாவுக்கும் சேர்த்து இரவு சாப்பாடு தயார் பண்ணிடு முருகா' என்றான் ஆனந்த்.

இடைப்பட்ட காலத்தில் ஆனந்தை சந்திக்க இயலாமல் போனதன் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ், இருட்ட ஆரம்பித்தது விளக்குகளை போட்டுவிட்டு இருவரும் வீட்டினுள்ளே சென்றனர், 'ஆமா, நான் வந்ததிலேர்ந்து சிஸ்டரையும் சுபாவையும் காணமே எங்காவது வெளில போயிருக்காங்களா' என்றான் சுரேஷ். 'வா' என்று சுரேஷை பார்த்து சொல்லிவிட்டு வீட்டினுள்ளிருந்த மாடிப்படிகளில் ஆனந்த் ஏற அவனை பின்தொடர்ந்தான் சுரேஷ்,

ஆனந்த் சுரேஷுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பற்றி பேசும் போது தன் மனைவி சொரணாவையும் அழைத்து உட்கார வைத்து கேட்கச் சொல்லுவான், ஆனந்தின் மனைவி சொர்ணா நன்கு படித்தவர், தங்களது ஒரே மகள் சுபாவை வளர்ப்பதற்காக வேலைக்கு செல்லாமல் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர், சுபா படிப்பில் ஆனந்தைப் போலவும் சொர்ணவைப் போலவும் படு கெட்டிக்காரி. சுரேஷுடன் விளையாட்டாக பேசும்போதெல்லாம் 'நம்ம ரெண்டு பேரும் சம்பந்திகளாகிடலாண்டா' என்பான் ஆனந்த். மாடியிலிருந்த ஒரு படுக்கையறை சுபாவினுடையது மற்றது கணவனும் மனைவியும் உபயோகிப்பது, சுபாவின் படுக்கையறையின் கதவு பூட்டபட்டிருந்தது, அடுத்த படுக்கையறையில் ஆனந்தின் மனைவி கட்டிலில் படுத்திருந்தார்,

சுரேஷ் ஆனந்தின் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் படி மெல்லிய குரலில் 'சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா' என்றான், 'மெதுவா ஏண்டா பேசறே சத்தமா பேசினாக் கூட அவள் எழுந்துக்க மாட்டாடா' என்றான் அழுகையுடன் ஆனந்த், ஆனந்தின் தோள்களை தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டு ஏண்டா என்னடா ஆச்சு சிஸ்டருக்கு என்றான் சுரேஷ், சுரேஷின் குரலில் தடுமாற்றம். ஆனந்த் பதில் சொல்லவே இயலாமல் குமுறி அழுதான், அவனை மேலும் வருத்தப்பட வைப்பதற்கு பிடிக்காமல் மீண்டும் மாடியை விட்டு இருவரும் கீழே வந்தனர்.

இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்குச் சென்றனர், அடுத்த நாள் காலை எழுந்த போது படுக்கையில் ஆனந்தைக் காணவில்லை, முருகன் ஓடிவந்தான், 'ஐயா டவல் இந்தாங்க சோப்பு குளியலறையில வச்சிருக்கேன்' என்றான், முருகனிடம் 'எங்கே ஆனந்த்' என்று கேட்டான் சுரேஷ், 'ஐயா காலைல நடக்கபோயிட்டு வருவாருங்க ஐயா வர கொஞ்சம் நேரமாகும் குளிச்சிட்டு வந்து நீங்க காலை உணவை சாப்பிடுங்க' என்றான் முருகன். குளித்து வந்த போது மணி எட்டு ஆகிவிட்டிருந்தது, காலையுணவை முடித்து விட்டு 'என்ன முருகா சொர்ணா சிஸ்டருக்கு எப்படி இந்த நிலைமையாச்சு' என்றான்.

ஐயா உங்களுக்கு எதுவுமே சொல்லலையாங்க, நம்ம சின்னம்மா சுபா வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு போனது தெரியுமாங்க என்றான், இல்லை தெரியாதே என்றான் சுரேஷ், சின்னம்மா வெளிநாட்டுக்கு படிக்க போனாங்க அங்கே அவங்க கூட படிச்சுகிட்டிருந்த பையனோட கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் செய்து தெரிவிச்சாங்க, உடனே இவங்க ரெண்டு பேரும் கெளம்பி சின்னம்மா இருந்த நாட்டுக்கு அந்த பையன் யாரு என்னனு பார்க்கறதுக்கு போனாங்க, அங்கே போனப்போ சின்னம்மாவோட கூட படிச்சிக்கிட்டிருந்த சிலர் கிட்ட விசாரிச்சப்ப சின்னம்மாவும் அந்த பையனோடசேர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையாகிடாங்கன்னு தெரிய வந்தது,

உடனே கிளம்பி இந்தியாவுக்கு போயிடலாம்முன்னு சின்னம்மாவை இவங்க ரெண்டு பேரும் வற்புறுத்தி இருக்காங்க, நான் வாழ்த்தாலும் செத்தாலும் அந்த பையனோடத்தான் இருப்பேன்னு சின்னம்மா பிடிவாதமா வெளி நாட்டுலேயே இருந்துட்டாங்க, இவங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பிட்டாங்க, சில மாசங்களுக்கு அப்புறம் சின்னம்மா போதையில கார் ஓட்டிக்கிட்டு போயி விபத்துல இறந்துட்டாங்கன்னு செய்தி வந்தது, அப்போ அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமா பாதிப்பு அடைஞ்சது, மருத்துவமனையில சேர்த்தாங்க, அங்கே இரண்டு மூணு மாசம் இருந்தாங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தப்ப அம்மாவுக்கு நினைவே இல்ல, கோமாவுலேயே படுக்கையா கெடக்குறாங்க, உயிர் மட்டும் இருக்கு, ஐயா உடைஞ்சு போயிட்டாரு .......

தூரத்தில் கேட்டை திறந்து கொண்டு ஆனந்த் வீட்டினுள்ளே வருவது தெரிந்தது, என்ன முருகா ஐயாவுக்கு டிபன் சாப்பிட கொடுத்தியா என்றான் ஆனந்த், சுரேஷைப் பார்த்து நீயும் எங்க கல்லூரியில ஜாயின் பண்ண போறதா கேள்விபட்டேண்டா சுரேஷ், அதைச் சொல்லும் போது ஆனந்தின் கண்களில் லேசாக தெம்பு தெரிந்தது, நான் நெனைச்சது போல நம்ம சம்பதிங்களாக முடியாது உன்னோட பையனையும் மனைவியையும் கூட்டிட்டு அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துடுடா என்றான் ஆனந்த்.

ஆனந்தின் வீட்டைவிட்டு வெளியேறும் போது சுரேஷின் மனதில் சுமையும் சோகமும் நெஞ்சை நிறைத்திருந்தது

March 24, 2019, 07:02:39 pm
Reply #18

AnJaLi

கண்ணன் என் காதலன்
« Reply #18 on: March 24, 2019, 07:02:39 pm »
ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, இரண்டு ஆண்டுகள் முடிந்தது போன்று இல்லாமல் மிகவும் நெருக்கத்துடனும் அன்யோன்யத்துடனும் இருந்து வந்தனர், உமாவின் அக்காள் கணவன் சுரேஷ் விற்பனை அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான், அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம், ஒரு முறை பெங்களுருவிற்கு சென்றிருந்தபோது ஆனந்தை தற்ச்செயலாக ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தான், பார்த்தவுடன் சந்தேகம் எழவில்லை, அப்படியே சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அதை உடனடியாக தனது மனைவியிடம் தெரிவிக்கவேண்டாம் என்ற முடிவில் இருந்தான் சுரேஷ், அதற்க்கு காரணம் தனது மாமனார் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும் ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகி இருந்ததால் குடும்பத்தில் கலவரங்களை உண்டாக்க சுரேஷ் விரும்பவில்லை.

ஆனால் இன்னொரு வருடமும் கடந்துவிட்ட நிலையில் மற்றொருநாள் சென்னையில் ஜனத்திரள் நிறைந்து கிடக்கும் ஒரு வீதியில் ஆனந்தையும் அதே இளம் பெண்ணையும் மறுபடியும் சேர்ந்து பார்த்த போது இதைப்பற்றி முதலில் ஆனந்திடம் விசாரிப்பதா தனது மனைவி மூலம் உமாவிற்கு தெரியப்படுத்துவதா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. சரியான முடிவிற்கு வர இயலாமல் அவர்களை பின் தொடர்வதென முடிவிற்கு வந்தான் சுரேஷ்.

ஆட்டோ ஒன்றில் ஏறிய இருவரையும் மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான், அவர்கள் சென்ற ஆட்டோ அடையாற்றிலுள்ள ஒரு வீதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் சென்று நின்றது, வெளியே இறங்கிய இருவரும் ஒன்றாக அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று மறைந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் அந்த அடுக்குமாடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சற்று வயதான ஆள் ஒருவர் சற்று தொலைவில் நிருத்தபட்டிருக்கும் நடமாடும் துணிகளை சுருக்கம் நீக்கும் இரும்பு பெட்டியுடன் நின்றிருந்த இரண்டு சக்கர வண்டியை வந்தடைந்தார்.

அவரிடம் சென்று அடுக்குமாடியைப் பற்றிய விவரங்களை கேட்டறிய முற்பட்ட போது அந்த ஆள் சற்று கோபமடைந்தவராக சுரேஷை ஏற இறங்க பார்த்தார், சுரேஷுக்கு ஒரு நிமிடம் தனது அவசரத்தின் மீது வெட்கம் ஏற்ப்பட்டது, மறுபடியும் சில துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆள் வேறு ஒரு வீட்டை நோக்கி நடக்கலானார், அந்த இருசக்கர வண்டியின் அருகே உட்கார்ந்திருந்த வயதான பெண் சுரேஷை கவனிக்காதவள் போல் உட்கார்ந்திருந்தாள் அவள் வயதான ஆசாமியின் மனைவியாக இருக்ககூடும் என்று யோசித்த வண்ணம், அம்மா அந்த அப்பார்ட்மென்ட்ல இப்போ உள்ள போனாங்களே அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லமுடியுமா என்றான்.

கிழவி சிறிது நேரத்திற்குப் பின் சுரேஷை நிமிர்ந்து பார்த்துவிட்டு தெரியாது என்றாள். அடுத்தது என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அன்றைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் எப்போதும் போல இரவு மணி பத்தை தாண்டிவிட்டிருந்தது. அவனுக்கு இரவு உணவு பரிமாறுவதற்கு வந்த அவன் மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்றான். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு தானும் தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் சுரேஷின் மனைவி சாரு.

ஒரு வருடத்திற்கு முன்னர் பெங்களுருவில் தான் பார்த்த அதே பெண்ணுடன் இன்றும் ஆனந்தை சேர்த்து பார்த்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் சுரேஷ், இதை உமாவிடம் எப்படி சொல்லுவது, ஆனந்தும் உமாவும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதைப் பற்றி யாவரும் அறிந்திருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது போன்ற விவாதங்கள் இருவருக்கும் ஏற்ப்பட்டது. சுரேஷும் சாருவும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

அன்று ஞாயிற்று கிழமை மணி காலை ஒன்பது, அடையாற்றிலிருந்த அடுக்குமாடியில் எந்த வீட்டில் அந்த பெண் வசிக்கிறாள் அவள் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்புமணியை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர், முதல் மாடியில் மூன்றாவது வீட்டில் அதே பெண் கதவை திறந்தாள், லேசாக சாருவிடம் சமிஞை செய்தான் சுரேஷ். குடும்ப அட்டைகளை சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு அவளது பெயர் கணவர் அல்லது பாதுகாப்பவர் பெயர் போன்ற விவரங்களை அவளிடம் விசாரித்த போது அந்த பெண் தனக்கு குடும்ப அட்டை பெங்களூருவில் இருப்பதாகவும் அதை முறைப்படி மாற்றிக்கொள்ள தேவைபட்டால் மாற்றிகொள்வதாகவும் தெரிவித்துவிட அவளது பெயரைக் கூட தெரிந்து கொள்வதற்கு இயலாமல் திரும்பிவிட்டனர் சுரேஷும் சாருவும்.

இத்தனை அழகியப் பெண் இவளுடன் ஆனந்திற்கு மறைவான தொடர்பு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று ஊகித்து வீடு திரும்பும் வழியில் உமாவின் வீட்டிற்கு சென்றனர். சாருவிற்கு உமாவையும் ஆனந்தையும் பார்த்த போது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் விவகாரம் அடிக்கடி நினைவில் வந்து இயல்பாக பேச விடாமல் தடுத்து தடுமாறச் செய்தது. உமா கொடுத்த காப்பியைமட்டும் அருந்திவிட்டு ஆனந்தின் எதிரே உமாவிடம் ரகசியத்தை சொல்ல இயலாமல் வீடு திரும்பினர்.

சுரேஷிற்கு மனதில் குழப்பம் இன்று எப்படியாவது அதை தீர்த்து விடுவது என்ற முடிவில் நேரே அடையாற்றிலிருந்த அடுக்குமாடி வீட்டை சென்றடைந்து மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான், அதே பெண் வந்து கதவைத் திறந்தாள், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் விசாரிக்க வேண்டும் என்றான், உள்ளே வாங்களேன் என்றாள், உள்ளேச் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான், சுவற்றில் ஆனந்தும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போன்று நெருங்கி நிற்கும் புகைப்படங்கள்.

உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா என்றான், எடுத்த எடுப்பிலேயே அவசரம் தொனித்தது சுரேஷின் குரலில், என் பெயர் ஷீலா. திருமணமாகிவிட்டதா, இல்லை, புகைப் படங்களில் உங்களுடன் இருப்பது உங்கள் கணவரா அல்லது, கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், அதற்க்கு ஷீலா பரவாயில்லை, அவர் எனது நண்பர் என்றாள், உடனே சுரேஷ் புகைப்படத்தைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றான்.

அவள் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் நினைப்பது போல்தான், அவர் என் காதலனும் கூட என்றாள், அதற்க்கு சுரேஷ் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான். தெரியுமே என்றாள் ஷீலா. அவர் மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று தெரியுமா உங்களுக்கு என்றான் சுரேஷ். ஷீலா அதற்க்கு பதிலேதும் பேசவில்லை, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து நேரே ஆனந்தின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

ஆனந்தின் அலுவலகத்தை அடைந்த போது ஆனந்த் சுரேஷை வரவேற்க்கதயாராக இருந்ததுபோல் இருந்தான், ஷீலா தொலைபேசியில் ஆனந்திடம் இதைப்பற்றி தெரிவித்திருக்க கூடும் என்று அனுமானித்தான் சுரேஷ். அலுவலகத்தின் வேறு பக்கத்தில் இருந்த விசிட்டர் அறையில் இருவரும் சென்று அமர்ந்தனர், ஷீலாவுடன் ஆனந்தை தான் பார்த்த எல்லா விவரத்தையும் கூறி உமாவின் வாழ்க்கை பிரச்சினையை தட்டி கேட்க தான் இருப்பதாக எச்சரிக்கை செய்தான், ஆனந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அலுவலகத்தில் சொந்த பிரச்சினைகளைப் பற்றி பேச தான் விரும்பவில்லை என்று சொல்லி சுரேஷை திருப்பி அனுப்பி விட்டான்.

தனது மனைவி சாருவிடம் கலந்தாலோசித்து, பிரச்சினையை உமாவிடமே விட்டுவிடுவது நல்லது என்று இருவரும் கைபேசியில் உமாவிடம் நடந்தவற்றைப் பற்றி விவரமாக சொல்லி ஆனந்திடம் பொறுமையாக விசாரிக்கச் சொன்னார்கள். உமாவிற்கு ஆச்சரியம், ஷீலா என்ற பெண்ணுடன் ஆனந்திற்கு உறவு இருப்பதற்கு வாய்ப்பே இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள். ஆனந்த் அன்று வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டு முடித்த பின் ஷீலாவைப்பற்றி விசாரித்தாள் உமா. ஆனந்த் உமாவிடம் தன் மீது சந்தேகம் உள்ளதா தான் அப்படியொரு பெண்ணிடம் பழகும் குணம் உள்ளவனா என்று கேட்டான். இதுவரையில் ஆனந்தை தான் முழுமையாக நம்பி வந்ததாகவும் சொன்னாள் உமா, தனது வாழ்க்கையில் எதையும் உமாவிடம் மறைத்ததே கிடையாது என்று சொன்னான் ஆனந்த்.

அப்படியென்றால் தனது அக்காவும் அவளது கணவனும் பார்த்த ஷீலா என்ற பெண் யார் என்று கேட்டாள் உமா. தன்னுடன் ஒன்றாக படித்த தனது பால்ய வயது முதல் தனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதன் கண்ணன் என்றான் ஆனந்த்.

March 24, 2019, 07:04:25 pm
Reply #19

AnJaLi

சந்தேகம்
« Reply #19 on: March 24, 2019, 07:04:25 pm »
அமுதாவிற்கு அன்று தூக்கம் பிடிக்கவில்லை, மாடியில் தன் படுக்கையறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள், ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீட்டு மதிர்ச் சுவரும் கேட்டும் தெரிந்தது,

மதிற்சுவர் மீது யாரோ ஒருவன் தொற்றி ஏறி சுவற்றின் மீது கயிற்றின் மீது நடப்பவன் போல மெதுவாக நடந்து வீட்டை நோக்கி செல்வது தெரிந்தது. இரவு மணி பனிரெண்டு ஆக போகிறது இந்த நடு நிசியில் மதிர்ச் சுவற்றின் மீது நடப்பது திருடனாகத்தான் இருக்கும், அடுத்த வீட்டின் தொலைபேசி எண் அமுதாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

நகர்ப்புற வாழ்க்கை என்பதால் அடுத்த வீட்டுக்காரர்களின் உறவு அவ்வளவாய் இருப்பதில்லை, இந்த நடு இரவில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது, உள்ளே போனவன் அதே வழியாகத்தானே திரும்பி வருவான், வரட்டும் உற்று பார்க்கலாம், உள்ளே போனவன் திரும்ப வரவே இல்லை, மணி இரவு ஒன்றாகி விட்டது, உறக்கம் வரவே அமுதா தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டிலிருந்து யாராவது வெளியில் வந்தால் தான் பார்த்ததை அவர்களிடம் சொல்லலாம் என்று ஜன்னல் வழியே அடுத்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தவள், அங்கே வேலைக்காரி வீட்டின் வாசலை துடப்பத்தால் சுத்தம் செய்து கோலம் போட்டு முடிக்கும் வரை மதிர்ச் சுவற்றின் அருகில் சென்று காத்திருந்தாள்.

அம்மா..... அம்மா ...

அமுதாவை நிமிர்ந்து பார்த்த அடுத்த வீட்டு வேலைக்காரி அவளை நோக்கி வந்தாள்.

'என்ன' என்று கேட்ப்பது போல அமுதாவை பார்த்தாள்.

இந்த வீட்டுகாரம்மா வீட்டுல இப்போ இருக்காங்களா

இருக்காங்கம்மா

நாயெல்லாம் கட்டி போட்டுத்தானே இருக்கு

ஆமாம்மா

சரி நானும் உன்னோடயே வரேன் நீ அங்கேயே இரு

அடுத்த வீட்டின் அம்மாவிடம் தான் நேற்று இரவு பார்த்ததை சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் ஒரு வித கலவரம் தெரிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து ' அப்போ நான் வரேன்..... என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள் அமுதா.

இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.......என்றார் அடுத்த வீட்டு அம்மா.

இல்லம்மா , இன்னொரு நாள் நான் வரேன்

போலீசுக்குத்தான் புகார் குடுக்கணும்......என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மா அமுதாவுடன் நடந்து வீட்டின் கேட்டுவரை வந்து, ' சமயம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்கோ' என்று சொல்லிவிட்டு அமுதா அவள் வீட்டிற்குள் போகும் வரை கேட்டினருகே நின்றிருந்து வழியனுப்பியபின் அடுத்தவீட்டு அம்மா அவர்கள் வீட்டிற்குள் சென்று விட்டார்.

* * * * *

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டு வேலைக்காரி அமுதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள். கதவை திறந்த அமுதா

என்னம்மா

அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணம்

சொல்லு

நேத்து நீங்க எங்க வீட்டு எசமானி அம்மா கிட்ட பேசினதை கேட்டுட்டு இருந்தேன், எனக்கு நீங்க இத பத்தி பேசத்தான் எங்க வீட்டு எசமானி அம்மாவை பார்க்க வரீங்கன்னு தெரியாம போச்சு

.............................

அது வந்துங்க, வேலைகாரிகளை சிபாரிசு செய்யற கம்பனியில இருந்து என்னை கூட்டிட்டு வந்து இருகாங்க, கம்பனி ஒப்பந்தப்படி வேலைக்கு வரவுங்களுக்கு உடம்புக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோயெல்லாம் இருந்தா வேலைக்கு சிபாரிசு செய்யறதில்லைங்க, அது மட்டுமில்ல, வேலை செய்யறவங்க வீட்டுக்கு தேடிக்கிட்டு சொந்தகாரங்க யாரும் வரக்கூடாது,

.............................

எனக்கு ஐம்பத்து வயசாகுதுங்க, இரத்த கொதிப்பு சர்க்கர நோய் எல்லாமே இருக்கு, அதனால என்னோட மகன் மாசத்துல ஒரு தரம் மாத்திரை வாங்கிட்டு வந்து எனக்கு குடுத்திட்டு போவான், நான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் என்னோட கல்யாணம் ஆன மகளை போயி பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு டாக்டர பார்த்துட்டு வருவேனுங்க

.............................

வீட்டுல எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் என்னோட மகன் மதில் சுவத்து மேல ஏறி வந்து மாத்திரையை என் கிட்ட குடுத்துட்டு போவான். இந்த வீட்டுல நிறைய நாய்கள வேற வளக்குறாங்க, அவனுக்கு நாய் பயம் .......அத தான் நீங்க பார்த்து இருக்கீங்க.


அப்படின்னா வீட்டுக்குள்ள வந்த அவன் ஏன் திரும்பி வெளியே போகல

அவன் போகும் போது சில சமயம் வீட்டுக்கு பின்னால இருக்கிற சுவத்து மேல போயி பக்கத்துக்கு தெருவுக்கு போயிடுவாங்க.......சுவத்து மேல நடக்குறத யாராவது பார்த்துட்டா பிரச்சினை ஆயிடக்கூடாதுன்னு

...............................

எங்க வீட்டு எசமானியம்மா பார்த்துட போறாங்கன்னு பயந்து பயந்து மெதுவா வருவாங்க

இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு

என்னோட மகன் வருவது அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுங்க

ம்.....ம்ம்.....

உன்னோட மகன் திரும்பவும் என்னைக்கு வருவான்?

வர பதினைஞ்சாம் தேதி வருவானுங்க

சரி நான் காத்திருந்து அவனை பார்த்து விவரத்தை அவன் கிட்ட சொல்லி உனக்கு வாங்கிட்டு வர மாத்திரைகளை வாங்கி வைக்கிறேன்............நீ வந்து வாங்கிட்டு போ

அம்மா......நான் அக்கம்பக்கத்து வீட்டுகாரங்க கிட்ட பேசுறது எங்க எசமானி அம்மாவுக்கு பிடிக்காதுங்க

சரி...........நான் அவங்க கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்.......நீ வெளியில வரும் போது வந்து வாங்கிட்டு போ

* * * * *

வேலைக்காரியின் மகனை அன்று இரவு பன்னிரண்டு மணிவரை காத்திருந்து மதில் சுவர் ஏறுவதற்கு முன் கையும் மெய்யுமாய் பிடித்து அவனிடம் நடந்ததை விவரமாய் சொல்லி மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்குள் வந்த போது அமுதாவின் கணவன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டான், இந்த அர்த்த ராத்திரியில் இவள் எங்கே வெளியில் போயிட்டு வருகிறாள் என்று யோசித்து கொண்டு அவள் படுக்கை அறைக்குள் வரும் வரை காத்திருந்தான்.

வீட்டினுள் வந்த அமுதா கதவை அடைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் வந்ததும் அவள் கணவன் தூங்குவதைப் போல விழித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு தூக்கம் கெட்டது, நாளைக்கு பார்க்கலாம் இதைப் பற்றி ஏதாவது சொல்கிறாளா என்று காத்திருந்தான்.

நாட்கள் ஓடின, ஒரு நாள் அமுதாவின் கணவன் வீட்டில் இருந்த நேரம் வேலைக்காரியின் மகன் வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான். வெளியில் நின்றிருந்த பையன் கையிலிருந்த மாத்திரை பொட்டலத்தை அவனிடம் நீட்டியபடி,

அம்மா இல்லீங்களா

யாரு நீ............எந்த அம்மாவ கேட்கிற

இந்த வீட்டுல இருப்பாங்களே .....அவுங்களத்தாங்க

நீ யாரு

நான் பக்கத்து வீட்டுல வேலை பாக்கற வேலைக்காரியோட மகனுங்க.......அம்மா கிட்ட இந்த மாத்திரை பொட்டலத்த குடுத்தா எங்க அம்மா கிட்ட குடுத்துடுவாங்க

நீயே கொண்டு போயி குடுக்க வேண்டியது தானே........எதுக்கு இங்க வந்து குடுக்கற

நடந்த கதையை முதலில் இருந்து வேலைக்காரியின் மகன் சொல்ல, மாத்திரை பொட்டலத்தை வாங்கி கொண்ட அமுதாவின் கணவன், மனதில் இருந்த சந்தேகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தது நல்லதாக போனது என்று நினைத்துக் கொண்டான்.

March 25, 2019, 10:05:26 am
Reply #20

AnJaLi

எருதூரில் வாழ்ந்து வந்த சோழியன் என்பவன் அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமல் செய்யமாட்டான் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் நம்பினர். இதனால் அவனிடம் அந்த ஊரில் உள்ள பல படித்தவர்கள் உள்பட அனைவரும் அவனது செய்கைகளை கவனித்து வந்ததுடன், அந்த செய்கைகளுக்கு பெரிதும் மதிப்பளித்தும் வந்தனர்.

அந்த காலத்தில் எல்லோருமே குடுமி வைத்திருந்தனர், யாரோ ஒரு சிலர் மட்டுமே சதுரவட்டை என்று சொல்லக்கூடிய முடித்திருத்தம் செய்வது வழக்கம், சோழியனுக்கும் அவனது தந்தையை போலவே குடுமிதான். சோழியனுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவன் பெற்றோர் அவனை கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்டனர், இதற்க்கு காரணம் இவனது இரண்டு அக்காள்களும் நாட்டியம் பயின்று வந்ததுடன், அந்த காலத்து திண்ணைபள்ளிக்கூடம் சென்று வந்தனர், அவர்களிருவரும் திறைமைசாலிகள் என்றும் பெயரெடுத்து வந்தனர்.

சோழியனை திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கே படிக்காமல் விளையாடுவதும் சுட்டித்தனங்கள் செய்வதுமாக இருந்து வந்ததால் திண்ணை பள்ளிக்கூட வாத்தியார் அவனது பெற்றோரை வரச் சொல்லி, இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை, அவன் மற்ற மாணவர்களையும் படிக்க விடாமல் குறும்புத்தனம் செய்கிறான், கண்டித்தாலும் செவி கொடுப்பதில்லை இதனால் அவனுக்கு வேறு எதில் ஆர்வமிருக்கிறதோ அதில் சேர்த்து விடுமாறு சொல்லி இனி திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஊரிலிருந்த கூத்துப்பட்டறைக்கு சிறுவர்களை சேர்த்துகொள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோழியனை அங்கே சேர்த்துவிட்டனர். சோழியனுக்கு வேறு வழியில்லாமல் போகவே கூத்துப்பட்டறையில் சேர்ந்து காலம் ஓட்டி வந்தான், சோழியனை கூத்தில் சாமரம் வீசுவது இன்னும் பல வசனம் பேசாத வேடங்களில் நிற்க வைத்தனர், ஒருநாள் பாட்டு பாடும் சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த சிறுவனுக்கு பதில் அரிச்சந்திரன் கூத்தில் அச்சிறுவனின் வேடத்தில் இவனை நிறுத்திவிட்டு பின்னாலிருந்து இவனுக்கு பதில் வேறொரு பெரியவர் வசனம் பேசி சோழியனை அந்த பையனுடைய வேடத்தில் நிற்க வைத்து அன்றைய கூத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த கூத்தை சோழியனின் ஊர் மக்களில் சிலரும் சோழியனின் பெற்றோரும் பார்த்ததிலிருந்து சோழியன் ஒரு நடிகனாகிவிட்டது போன்ற பரவசமடைந்தனர். சோழியன் வளர வளர, சிறு சிறு வேடங்கள் கொடுத்து கூத்து நடத்தி வந்தனர். சோழியனின் அம்மாவிற்கு உடல் நலம் சரியின்றி போனதாலும் சோழியனின் தமக்கைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வீட்டில் துணைக்கு வேறு ஆள் இல்லை என்ற காரணமும் சோழியனை நிரந்தரமாக கூத்து பட்டறையிலிருந்து கூட்டி வந்து வீட்டில் அவனுடைய பெற்றோர் அவனை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

சோழியன் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ குளித்து முடித்து விட்டு தன்தலை முடியை உலர்த்தி கொண்டு நின்று கொண்டிருக்கும் சமயங்களிலும், மற்ற பல சமயங்களிலும் தான் கற்றுக்கொண்ட கூத்தை நினைவு படுத்திகொள்வான், தன்னை மறந்து அந்த கூத்தின் கதாபாத்திரங்களின் நினைவில் ஒன்றி விடுவான், அப்போது அவன் தனது தலையை ஆட்டி ஆட்டி வசனங்களையும் பாடல்களையும் தனக்குத் தானே சொல்லி கொள்வான், அப்போது அவனது தலைகுடுமி ஆடி கொண்டே இருக்கும், அவனிடம் அவனது குடுமி ஆடுவதற்கு காரணம் கேட்ட சிலரிடம் ' நான் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்ட முழுவதும் உங்களுக்கு சொல்லி விளக்க முடியாது, அதனால் என் குடுமி ஆடினால் அதற்க்கு ஒரு காரணமிருக்கும்' என்பானாம். சோழியனின் குடுமி ஆடினால் கிராம மக்கள் சோழியன் எதைசெய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் அவனது குடுமி ஆடினால் கூட அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்வார்களாம்,

அதனால் சோழியனின் குடுமி காற்றில் ஆடினால் கூட நிச்சயம் அதற்கொரு காரணமிருக்கும் என்று ' சோழியன் குடுமி சும்மா ஆடாது 'என்ற வழக்கு வந்ததாக கதை.


March 25, 2019, 10:07:14 am
Reply #21

AnJaLi

தத்ரூபம்
« Reply #21 on: March 25, 2019, 10:07:14 am »
மோகனும் மீனாவும் திருமணமாகிய புதிய தம்பதிகள் ஆனால் மோகனுக்கு முடித்து கொடுக்கவேண்டிய வேலைகள் நிமித்தமாக இரவு பகலென்று பாராமல் உழைத்தாக வேண்டியிருந்தது, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையென்பதால் பெரும்பாலும் மோகனுக்கு இரவு நேர வேலைகள் இருப்பது வழக்கம். மோகனின் மனைவி மீனா, இளம் வயது, நல்ல நிறம், காண்போரைக் கவரும் கவர்ச்சி, பேசும் கண்கள், மிதமான உயரம், மெல்லிய உடல் வாகு, கல்லூரியில் பொறியல் படித்து முடித்தவுடன் திருமணமும் முடிந்தது.

மீனாவை பார்ப்பவர்கள் கண்களை அகற்ற சிறிது அவகாசம் தேவைப்படும். மீனாவுடன் படித்த குமரனுக்கு மீனாவை அடையாமல் விட மனதில்லை, யாரிடமும் சிக்காமல் கல்லூரியை முடித்து வந்துவிட்டாலும் குமரன் அவளை துரத்துவது தொடர்கதையாகி வந்தது, மீனாவின் புகுந்த வீட்டின் விலாசத்தை எப்படியோ அறிந்து கொண்டு தவறாமல் தொலைபேசியில் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது, அன்றும் அப்படித்தான் அவன் தொலைபேசியில் மீனாவிடம் 'உன் புருஷன் இன்னைக்கு இரவு வேலைக்குச் சென்றுவிட்டான், சரியாக இரவு பத்துமணிக்கு உன் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டுவேன், நீ திறந்தாகவேண்டும் திறக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஏற்க்கனவே சொல்லிவிட்டேன், நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இரவு மணி பத்து, இடி மின்னல் பெருமழை ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது, தெருவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது, சொன்னபடி மீனாவின் வீட்டின் வாயிலில் வந்து நின்ற குமரன் கால்களிலிருந்த செருப்பை கழற்றிவிட்டு கதவை லேசாக தட்டுவதற்கு கதவில் கையை வைத்தவுடன் கதவு திறந்து கிடப்பதை கவனித்தான் மீனாவின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது, கதவை திறந்து ஒரு அடி உள்ளே வைத்தவன் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டான், லேசாக கைகள் இரண்டும் அவனையறியாமல் நடுங்கியது.

ரத்தவெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தாள் மீனா, அங்கே நின்று நேரம் கடத்துவது ஆபத்து என அவன் மனம் எச்சரித்தது, தனது கை ரேகைகள் எங்காவது எதிலாவது படிந்துவிடக் கூடும் என்ற பயத்தில், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அந்த வீட்டைவிட்டு வெளியேறினான், யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒருமுறை சுற்றிலும் பார்த்தபோது மழை வெள்ளம் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருந்தது, வீதியில் யாரும் தென்படவில்லை.

முழுமூச்சாக ஓடி தெருவிலே வந்தபோது அவனை உரசிக்கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தை வந்தடைந்து தான் செல்ல வேண்டிய ரயில் தயாராக நின்றிருக்கவில்லை என்றாலும் தயாராக நின்றிருந்த ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்னர் பத்து நிமிட நேரம் கழித்து ரயில் கிளம்பியது, ரயிலில் உட்கார்ந்திருந்த பத்து நிமிடங்களும் உள்ளத்தினுள் படபடப்பு.

ஒருவழியாக ரயில் கிளம்பிய பின்னர் தான் அந்த ரயில் ஏதோ ஊருக்குப் போவதை அவனால் உணர முடிந்தது. கண்ணிலிருந்து நீங்காத மீனாவின் அந்த கரு விழிகள் அவனை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்தியது. யாரோ தனக்கு முன்னர் வந்து எதற்காகவோ மீனாவை குத்தி கொன்று போட்டுவிட்டு போயிருப்பதை நினைத்தாலே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது குமரனுக்கு.

கடியாரத்தில் மணி பத்து அறைக்கு ஒரு மணி அடித்தவுடன் மீனா மெதுவாக எழுந்தாள், அவள் திட்டமிட்டபடியே சிகப்பு பேனாவிற்கு உபயோகிக்கும் மையை தன் மீதும் தரையிலே சிறிதும் ஊற்றி கொண்ட பின் கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு குமரன் அங்கு வந்து போகும் வரை அசையாமல் பிணம் போல கிடந்து, பார்ப்பவரை சிந்தனை செய்யவிடாமல் துரத்தியடிக்க அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, இனி குமரன் என்ற காமுகனின் போராட்டம் நீங்கியது என்ற நிம்மதி அடைந்தாள் மீனா.

March 25, 2019, 10:08:56 am
Reply #22

AnJaLi

குண்டக்கா மண்டக்கா
« Reply #22 on: March 25, 2019, 10:08:56 am »
பரம்பரை சொத்து ஓடு வேய்ந்த நாலுகட்டு வீடு, தோட்டத்தில் தென்னை மரங்கள் சுமார் பத்து தேறும், முருங்கைமரம் கொய்யாமரம் மாமரம் என்று மனிதனுக்குத் தேவையான அத்தனை மரம் செடி கொடிகளும் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு, தினம் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டுகொள்வதுடன் விவசாயம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தத் தேவையான பத்து ஏக்கர் விளைநிலமும் நீர் பாய்ச்சலுக்கு குறைவில்லாத கிணறும் மாடசாமிக்கு உண்டு. மாடசாமியுடன் பிறந்த சகோதரி ஒருத்தியை அடுத்திருந்த கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியாருக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்வித்தனர் அவரது பெற்றோர், திருமணமாகிய அடுத்த வருடத்தில் பதினான்கே வயதான மாடசாமியின் தமக்கை ஒரு பெண் குழந்தையை பெற்ற பின் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் என்பதால் ஜன்னி ஏற்ப்பட்டு இறந்து போனாள். தமக்கை இறந்த பின்னர் அவள் பெற்றெடுத்தப் பெண் குழந்தை அவர்களது வீட்டிலேயே வளர்ந்து வந்தது, அவளது பெயர் துளசி.

துளசி வயதிற்கு வந்தவுடன் மாடசாமிக்கு திருமணம் செய்து தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டனர் மாடசாமியின் பெற்றோர். சிறிய வயதிலேயே திருமணம் நடந்தி வைத்ததால் மாடசாமிக்கும் துளசிக்கும் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஒவ்வொரு பிரசவத்தின் போதும் நகரத்திலிருந்த தனியார் பிரசவ மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பிரசவம் பார்த்துவந்தனர், ஆறாவது வருடமும் துளசிக்கு பெண் குழந்தையே பிறந்த போது மருத்துவர் இனிமேல் துளசியின் உடல் நிலை பிரசவத்தை தாங்காது என்று கூறிவிட்டனர். ஒரே ஒரு ஆண் குழந்தை வேண்டும் பிறகு குழந்தை வேண்டாம் என்று நினைத்து பல தெய்வங்களை வேண்டிக் கொண்ட பின் ஏழாவது பிரசவத்தில் ஒரு மகன் பிறந்தது ஆனால் துளசியை பறி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

குழந்தைகளை வளர்க்கும் பொருப்பு மாடசாமியின் பெற்றோருக்கு இருந்து வந்தது, சில வருடங்களில் மாடசாமியின் முதல் பெண் பனிரெண்டு வயதுடையவளான போது மற்ற குழந்தைகளின் சில வேலைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவளிடம் கொடுத்தனர், மாடசாமியின் மகனுக்கு அவனது மனைவியின் நினைவாக துளசிராம் என்று பெயரிட்டனர். துளசிராமிற்கு ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த போது அவனது ஆறு அக்காள்களும் அவனை மிகவும் அன்புடனும் ஆசையுடனும் பாதுகாத்து வந்தனர்,

தனது அக்காள்களை அக்காள் என்று ஒருவரைக் கூப்பிட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள், இதை கவனித்த துளசியின் தாத்தா ஒவ்வொருவரது பெயரிலிருக்கும் முதல் எழுத்தைச் சொல்லி அதனுடன் அக்காவையும் சேர்த்து கூப்பிடச் சொல்லி கொடுத்தார், அதன்படி ஒவ்வொரு அக்காளையும் அவர்களது பெயரில் வருகின்ற முதல் எழுத்துடன் அக்காவை சேர்த்து கூப்பிட்டு வந்தனர். துளசியும் அவனது அக்காள்களும் பள்ளிக்குச் செல்லும் போதும் விளையாடுமிடங்களிலும் கூட அதே போன்று சொல்லி கூப்பிடுவது வழக்கமாகியது.

'கு'னாக்கா, 'மா'னாக்கா என்று குழந்தைகள் ஒருவரையொருவர் அழைத்ததை கண்ட அந்த கிராமத்து மக்கள் இதென்ன 'குனாக்கா' மானாக்கா' என்று கூப்பிடுகின்றீர்களே என்று சொல்லி கேலி செய்தனர். இச்சொல்லானது அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சொல்லுமிடத்தில் வேறு வார்த்தைகளை மாற்றி குறிப்பிட்டு பேசும் போது அதைச் சுட்டி காண்பிப்பதற்கு 'குனக்க மானக்க என்று பேசாதே' என்று சொல்லி வந்தனர், பிறகு அச்சொல் மருவி நாளடைவில் 'குண்டக்க' மண்டக்க' என்று மாற்றி சொல்லப்பட்டது. இதன் உண்மை காரணத்தை அறியாவர்களும் இந்த சொல்லை உபயோகிக்க ஆரம்பித்த போது 'குண்டக்கா மண்டக்கா' என்று மாறிபோயிற்று.

March 25, 2019, 10:10:19 am
Reply #23

AnJaLi

நகை
« Reply #23 on: March 25, 2019, 10:10:19 am »
கார் வேகமாக சென்று கொண்டிருந்தது, வெயலின் தாக்கத்தினால் தண்ணீர் குடித்தும் தாகம் தீராமல் மீண்டும் மீண்டும் தாகம் எடுத்துகொண்டிருந்தது தேவகிக்கு, சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி, அங்காங்கே ஒரு சில பனை மரங்களும் வேறு மரங்களும் மின்சார கம்பங்களும் வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏதாவது சிறிய குக்கிராமங்கள் வந்த போது சிறிய தேநீர் கடைகளும் இன்னும் சிறிய கடைகளும் தென்பட்டது, ஓட்டுனர் பரமேஸ்வரன் வேலையில் சேர்ந்தபின்னர் முதல் முதலாக அவனுடன் சேர்ந்து மைசூரில் தங்கி படிக்கும் ஒரே மகளை பார்க்க சென்று கொண்டிருந்தாள் தேவகி, மாதம் ஒரு முறை தேவகி தனது மகளை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

தேவகியின் பெயரில் பல சொந்த தொழில்கள் நடத்தி வந்தார் அவளது கணவர், கொள்ளை லாபம், சீக்கிரத்திலேயே அவர்களது அந்தஸ்த்து கோடீஸ்வரர்களாக மாற்றிவிட்டது, தேவகி சாதாரணமாக அணியும் மொத்த தங்க நகைகளின் மதிப்பு மட்டுமே சில பல கோடிகள் தேறும், அடிக்கடி கார் ஓட்டுனர்களை மாற்றிக்கொண்டு இருப்பது கணவன் மனைவியின் வழக்கம், அதிக பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு ஓட்டுனர் என்கின்ற கணக்கில் இதுவரையில் தேவகி மற்றும் அவளது கணவருக்கு ஓட்டுனர்களாக வேலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

தேவகி பரமேஸ்வரனை கூப்பிட்டு வழியில் இளநீர் விற்பவரை பார்த்தால் வண்டியை நிறுத்திவிட்டு குடிப்பதற்கு இளநீர் வாங்க சொல்லி கட்டளை இட்டாள். பெங்களூருவை கார் நெருங்குகையில் நடுத்தர வயதில் ஒரு ஆண் இளநீர் விற்றுக் கொண்டிருந்தான், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு இளநீர் வாங்கி வந்து தேவகியிடம் கொடுத்தான் பரமேஸ்வரன். ஓட்டுனர் தனது இருக்கையின் கீழே இருந்த தண்ணீர் நிரம்பிய குப்பியை எடுத்து குடித்தார். கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து இளநீருக்குக் பணத்தை கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி கைப்பைக்குள் போட்ட பின்னர் கார் மறுபடியும் ஓடத் துவங்கியது.

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கார் ஓடிக்கொண்டிருந்தபோது சிறிது தொலைவில் வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தது காரை விட்டு இறங்கிய பரமேஸ்வரன் முன்னால் நின்றிருந்த கார் ஓட்டுனரிடம் எதனால் அந்த தேக்கநிலை என்பதை கேட்டறிந்தார், முன்னே சென்ற டாங்கர் லாரியும் சரக்கு எடுத்துச் சென்ற லாரியும் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது, மைசூருக்கு காரில் செல்வதற்கு வேற்று சாலை வழியை கேட்டறிந்து மாற்றுப்பாதையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது அந்த சாலை தார் போடாமல் யாரும் புழங்காமல் இருந்ததால் வண்டி துக்கியடித்துக்கொண்டு போனபோது திடீரென்று காரின் முன் சக்கரம் பழுதடைந்தது, ஓட்டுனர் பரமேஸ்வரன் காரைவிட்டு இறங்கி வேறு சக்கரத்தை மாற்றி போடுவதற்குள் முழுவதுமாக இருட்டி விட்டது.

திடீரென்று காரின் முன்புறம் வந்து நின்ற சிலர் கையசைத்து காரை நிற்க்கச் சொன்னதும் நிறுத்திய ஓட்டுனரிடம் கதவைத் திறக்கச் சொல்லி முரட்டுக் குரல்கள் ஓலமிட்டது, என்ன செய்வதென்று விளங்காத ஓட்டுனர் விழித்துகொண்டிருந்த போது காரின் முன் விளக்கை தட்டி உடைக்க முற்ப்பட்டனர் அந்த முரடர்கள், ஓட்டுனர் கதவைத் திறந்தவுடன் இரண்டு பேர் ஓட்டுனரின் கை கால்களை கயிறுகளால் கட்டி போட்டுவிட்டு பின்னால் உட்கார்ந்திருந்த தேவகியின் நகைகளை பணத்தை கேட்டனர், அவர்களிடம் கூரிய ஆயுதங்கள் இருப்பதை காரின் முன் விளக்கில் கண்ட தேவகி கொடுக்காவிட்டால் கொன்றுவிட்டு நகை பணத்தை எடுத்து போவார்கள் என்பதை அறிந்து எல்லா நகைகளையும் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை பொழுது விடியும் சமயம் அரைகுறை வெளிச்சத்தில் பரமேஸ்வரனின் கைகால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் காரை ஒட்டிக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தனர். பரமேஸ்வரன் தேவகியிடம் அங்கிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் என்று சொன்ன போது தேவகி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மகளை பார்த்த பின் மறுபடியும் காரில் வீட்டை வந்தடைந்தாள் தேவகி. பரமேஸ்வரன் தேவகியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.

ஒருநாள் காரின் உட்புறம் சுத்தம் செய்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் கண்ணில் நல்ல கனமான தங்க நகை தென்பட்டது, இதை கொண்டுசென்று தேவகியிடம் கொடுப்பதா அல்லது அவர்களாகவே வந்து தேடும்போது கொடுப்பதா என்று யோசித்தபோது, அளவிற்கு அதிகமாக அவர்களிடம் இருப்பதால் தானோ நகையை கேழே விழும் அளவிற்கு அலட்சியமாக வைத்திருக்கின்றனர் என்று தோன்றியது, அதனால் அந்த நகையை திரும்ப கொடுக்காமலேயே பரமேஸ்வரன் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

தேவகியின் வீட்டின் ஓட்டுனர் வேலையிலிருந்து பரமேஸ்வரனை நீக்கி விட்டனர், பணத்திற்கு மிகவும் கஷ்டம் ஏற்படத் துவங்கியது, தேவகி வீட்டில் வேலை செய்தபோது கிடைத்த நகையின் நினைவு வந்தது. கடைக்கு எடுத்துச் சென்று அதன் எடையை அறிந்து விற்று பணமாக்க கடைக்காரரிடம் கொடுத்தபோது நகை வியாபாரி அந்த நகை தங்கமல்ல என்று கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார். அப்போதுதான் பரமேஸ்வரனுக்குப் புரிந்தது தேவகி திருடுபோன நகைகளையோ காணாமல் போன நகைகளையோ தேடுவதே கிடையாது ஏன் என்பது

March 25, 2019, 10:12:15 am
Reply #24

AnJaLi

ரகசியம்
« Reply #24 on: March 25, 2019, 10:12:15 am »
புதிய தனி வீடு என்பது சுகந்திக்கு கனவாகவே இருந்து வந்தது, முப்பது வருட தாம்பத்யத்திற்க்குப் பின் கனவு இல்லம் உண்மையாகியத்தில் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியை குலைத்து விடுவது போன்ற செயல் ஒன்று நடந்து முடிந்தது, வீட்டை பூட்டிவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து திரும்பி வந்து பூட்டைத் திறக்க இருந்த போது கதவிலிருந்த பூட்டைக் காணவில்லை தாழ்ப்பாள் உருகுலைந்து காணப்பட்டது, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையிலிருந்த பீரோ திறந்து கிடக்க அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறிக்கிடந்தது.

காவல்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் அவளது கணவனுக்கு கைபேசியில் அழைத்து நடந்தவற்றை சொன்னபோது, சுகந்தியின் குரலில் நடுக்கம், படபடப்பு. அவள் கணவன், பீரோவில் விலையுயர்ந்த பொருள், பணமும் ஒன்றும் வீட்டில் வைப்பதில்லையே பிறகு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய் முதலில் அசுவாசப்படுத்திக்கொள் என்றார். இல்லை உடனே இதை பதிவு செய்து கைரேகை எடுக்கவும் மோப்ப நாய் அனுப்பவும் ஏற்பாடு செய்யுங்கள் என்றாள் சுகந்தி. பீரோவில் என்ன பொருள் காணாமல் போனது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும், முதலில் நீ உன்னை அசுவாசப்படுத்திக் கொள் என்றார்.

என்னை என்னால் அசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முடியவில்லை உடனே ஆட்களை அனுப்புங்கள், என் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருக்கிறது என்றாள் சுகந்தி பிடிவாதமாக. ஆட்களை அனுப்புவது என்பதைவிட அவர்களிடம் என்னவென்று புகார் கொடுக்கப் போகிறோம் என்பதையும் நாம் தயாராக வைத்திருக்கவேண்டும் அல்லவா என்றார், என்னோட செயின் அழகிய டாலருடன் வைத்திருந்தது காணவில்லை, அதனுடன் அந்த சிறிய ஆர் என்கிற ஆங்கில எழுத்து போட்டிருந்த மோதிரமும் காணவில்லை. இதற்க்கு போலீசை அங்கே அனுப்பினால் என் மானம் தான் போகும் பேசாமல் இரு, ஒரு புகார் மனு எழுதி கொடுத்து வைக்கிறேன், வேறு இடங்களில் திருடு போன நகைகளை கைப்பற்றும் போது இந்த இரண்டும் கிடைத்தால் அப்போது நமக்குத் திரும்ப கிடைக்க அங்குள்ள காவல்துறையின் அதிகாரியிடம் நான் சொல்லிவைக்கிறேன், முதலில் உன்னை அசுவாசப்படுத்திக்கொள் என்றார் அவள் கணவர்.

நகைத் திருடர்கள் பிடிபடும்போது கிடைக்கும் நகைகளில் அந்த செயினும் மோதிரமும் கிடைக்கவில்லை, வருடங்கள் கடந்தது, சுகந்தி எப்போதும் அவள் கணவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள், வீட்டிற்கு வந்து செல்கின்ற காவல்துறையைச் சார்ந்த நண்பர்கள் ஒருவர் விடாமல் காணாமல் போன செயினையும் மோதிரத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கமாகி போனது, ஒருமுறை விஷச் சாராயம் காய்ச்சி விற்ற கும்பலை பிடித்துவந்து காவலில் வைத்திருந்தனர், காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவன் கழுத்தில் அதே சங்கிலி இருப்பதை கவனித்ததாக ஒரு போலீஸ்காரர் சுகந்தியின் கணவருக்கு தகவல் தெரிவிக்க அங்குவந்த சுகந்தியின் கணவருக்கு அந்த செயின் காண்பிக்கப்பட்டது, அதே செயின்,

செயினை அணிந்திருந்தவனை அழைத்து வரச் சொல்லி அந்த செயின் எங்கே எப்படிக் கிடைத்தது என்று விசாரணை செய்தபோது, கள்ளச் சாராயம் விற்றபோது காசு கொடுக்காமல் குடித்துவிட்டு தப்பிக்க முயன்ற ஒருவனிடமிருந்து கிடைத்ததாக சொன்னான், அவனிடமிருந்து செயினை வாங்கிச் சென்று மனைவி சுகந்தியிடம் கொடுத்தபோது அவளுக்கு சந்தோசம் பெருகவில்லை, ஆர் என்ற ஆங்கில எழுத்துப் பதித்த மோதிரம் இன்னும் கிடைக்கவில்லையே என்ற குறைதான். மோதிரத்தை எங்கே போய் தேட என்று அலுத்துக் கொண்டார் அவள் கணவர்.

ஆனால் கோவில் உண்டியலை உடைத்து திருடிய திருடனை பிடித்த போது அந்த உண்டியலில் இருந்த ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டது அத்துடன் அந்த ஆங்கில ஆர் எழுத்து பொறித்திருந்த மோதிரமும் கிடைத்துவிட்டது, மோதிரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் காவலாளர். செயினை அடையாளம் காட்டிய போலீஸ்காரர் மோதிரம் கண்டு பிடித்த போலீஸ்காரரிடம் அந்த செயினு தங்கமில்லையாம் அவனுக்கு தெரியாமல் அதை வைக்க மார்வாடி கடைக்கு கொண்டு போனபோதுதான் அந்த செயினு ஐம்பொன்னுல செய்ததுன்னு தெரிஞ்சுச்சாம், அந்த கள்ளச் சாராயம் வித்தவன் சொன்னான் என்றார், மோதிரத்தை கண்டு பிடித்துக் கொடுத்த போலீஸ்காரர் பதிலுக்கு கோவில் உண்டியலத் திருடியவனும் அதத்தான் சொன்னான் என்றார்.
மோதிரமும் செயினும் கிடைத்த மகிழ்ச்சி சுகந்திக்கு, பள்ளியிறுதி ஆண்டில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த போது பள்ளியில் பணி புரிந்த அவளது கணக்கு வாத்தியார் அவளுக்கு கொடுத்த நினைவுப் பரிசு ஆர் மோதிரம், இளங்கலை படித்தப் பின் காவல்துறையில் பணி செய்ய வேண்டுமென்று விரும்பி பரீட்சை எழுதி வெற்றிபெற்று அதிகாரியாக பணி நியமனம் கிடைத்ததற்கு அதே வாத்தியார் கொடுத்த இரண்டாவது பரிசு செயின், நமது திருமண நிச்சயதார்த்ததிற்க்குதான் உனக்கு தங்கத்தில் போடுவேன் என்று சுகந்தியிடம் சொன்ன அந்த ராசா என்கிற ராஜராஜன் வாத்தியார் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் காலமான விவரங்கள் சுகந்தியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

March 25, 2019, 10:13:50 am
Reply #25

AnJaLi

ஆயிரம் ரூபாய்
« Reply #25 on: March 25, 2019, 10:13:50 am »
அந்த ரூபாய் தாளின் வெண்ணிறப் பகுதியில் அடர்த்தியான பேனாவினால் ஐ லவ் யு என்று எழுதி அதன் கீழே மனோ ரம்யா என்ற பெயர்களுடன் காதலர் தினத் தேதியுடன் அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு, அன்று காலை வங்கியிலிருந்து முக்கிய செலவுகளுக்காக எடுத்து வரபட்ட ரூபாய் நோட்டுக்களுடன் இருந்தது, மஞ்சுவிற்கு ஏனோ அந்த ரூபாய் தாளை செலவழிக்க தோன்றவில்லை, மஞ்சுவின் கணவன் அலுவலக வேலையாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம், சில வித்தியாசமான நம்பிக்கைகளை கொன்டவன், தன் மனைவியை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் தனக்கு அதிஷ்டம் ஆரம்பித்தது என்பதும், மனைவியின் கையில் பணம் பெற்றுச்சென்றால் செல்லுமிடத்திலிருந்தும் வரவேண்டிய அல்லது கிடைக்கவேண்டிய பணம் எவ்வித தடையுமில்லாமல் கைக்கு வந்துசேரும் என்பதும் மஞ்சுவின் கணவன் சசிக்கு நம்பிக்கை.

அன்று அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு செல்லவிருந்த கம்பெனியின் பொது மேலாளர் திடீரென்று உடல்நலமின்றி விடுப்பு எடுத்துவிட்டதால் சசிதரனை டெல்லிக்கு போக சொன்னார்கள், அதிலும் அந்த டெண்டர் மட்டும் இவர்களது கம்பெனிக்கு கிடைத்துவிட்டால் சசிக்கு நிச்சயம் பதவி உயர்வும் மற்றும் பலவிதமான வசதிகளையும் நிர்வாகம் கொடுத்து விடுவது நிச்சயம், வீட்டிற்கு வந்து உடனே விமானநிலையத்திற்கு புறப்படும் நேரத்தில் மனைவி மஞ்சுவிடமிருந்து பணம் கேட்டு வாங்கிச்செல்ல வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது, கைபேசியில் மஞ்சுவை தொடர்பு கொண்டபோது கதவின் சாவியை அடுத்த வீட்டில் கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகவும் அதை வாங்கி திறந்து பணம் எடுத்து செல்லச் சொன்னாள்.

மஞ்சுவின் கையில் வாங்கிச் சென்றால்தான் காரியம் நல்லபடியாக நடக்கும் என்ற தனது நம்பிக்கைப் பற்றி எப்போதுமே மஞ்சுவிடம் சசி தெரிவித்தது கிடையாது என்பதால் அடுத்த வீட்டிலிருந்து சாவியை பெற்று கதவை அவசரமாகத் திறந்து மஞ்சுவின் கைப்பையிலிருந்து அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான், ஆனாலும் அவன் மனதில் மஞ்சுவின் கையில் அந்த பணத்தை வாங்க இயலாமல் போனது குறித்து லேசான அதிருப்தி ஏற்பட்டிருந்தது. டெல்லி சென்று அங்கிருந்து வாடகைக்கார் ஒன்றை பதிவு செய்து டெண்டர் ஏலம் விடப்படும் இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்து ஏலத்தில் தனது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்ததில் மனதிற்கு மிகவும் நிம்மதி ஏற்பட்டது.

சசி எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வு மற்ற வசதிகளையும் கொடுத்தது நிறுவனம், அந்த ஆயிரம் ரூபாய் தாளை சசி எடுத்துக்கொண்டு போய் இருப்பதை கவனித்த மஞ்சுவிற்க்குச் சற்றே ஏமாற்றம், சசி ஊரிலிருந்து வந்த பின் அவன் எடுத்துச் சென்ற ஆயிரம் ரூபாய் தாளைப்பற்றி கேட்டு அதை அவன் செலவழிக்காமலேயே திரும்பவும் கொண்டு வந்து இருப்பதையறிந்து சந்தோஷத்துடன் வாங்கி மறுபடியும் தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். சசியிடம் அதில் எழுதப்பட்டிருந்தவற்றைக் காண்பித்து யாரோ காதலர்கள் அந்த ரூபாயை நினைவுச் சின்னமாக்கி இருப்பதையும் ஏனோ அந்த ரூபாய் நோட்டை தனக்கு செலவழிக்கவே தோன்றவில்லை என காரணமும் கூறினாள்.

அந்த ரூபாய் நோட்டு மஞ்சுவின் கையில் கிடைத்த ஒருவாரத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் அன்றைய செய்தியில் 'கடற்கரையோரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காதலர்கள் இருவரை கத்தியை காண்பித்து மிரட்டி பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலி பணம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருகொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இருவரையும் கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு ரவுடிகள் தப்பியோட்டம், அந்த இளம் காதலர்களை இதுவரையில் யாரும் தேடி வராததால் பிணங்களை காவல்துறை கைப்பற்றி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது, இளம் பெண்ணிடமிருந்த கைபையில் கிடைத்த குறிப்புகளிலிருந்தும் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் உரிமத்திலிருந்த பெயர்களில் கொலைசெய்யபட்டுக் இறந்தவர்கள் மனோ,ரம்யாவாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. கொயாளிகளை பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

March 25, 2019, 10:21:52 am
Reply #26

AnJaLi

விரித்த சிறைப்பறவை
« Reply #26 on: March 25, 2019, 10:21:52 am »
மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பெருமை பேசுபவர்களுக்கிடையில், குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு குடும்பத்தைப்-பற்றிக் கவலைப்படாமல் குடும்பப் பாசத்தை, நாட்டு மக்களின் நலனுக்காகத் தியாகம் செய்திருப்பவரே 65 வயதாகும் ஆங் சான் சூகி.

1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் இவரது தந்தை ஆங் சான். அதே ஆண்டிலேயே ராணுவ அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். மியான்மரின் தேசத் தந்தை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்-படுகிறார்.
 

பள்ளிப் படிப்பை யாங்கூனில் முடித்த சூகி, 1960 இல் இந்தியாவுக்கான மியான்மர் தூதராகச் செயல்பட்டார். அப்போது, டில்லியிலுள்ள லேடி சிறீராம் கல்லூரியில் அரசியலில் பி.ஏ.-பட்டம் பெற்றார். 1969 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்-கழகத்தில் தத்துவம், அரசியல் பொருளா-தாரத்தில் பட்டம் பெற்று அமெரிக்கா-வின் நியூயார்க் நகரில் குடியேறி, 3 ஆண்டுகள் அய்.நா.சபையில் பணியாற்றினார்.
 

1972 இல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, லண்டனில் வசித்த இவர், இரு குழந்தைகளுக்குத் தாயாகி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றார். இந்தியா வந்த சூகி, சிம்லாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பேராசிரியையாகப் பணியாற்றினார்.
 

1988 இல் உடல் நலம் பாதித்த தன் தாயைப் பார்க்க மியான்மர் வந்தபோது, அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அரசியல் ஈடுபாடு அமைந்தது.
 

ராணுவ ஆட்சியின் கொடுமையைப் பார்த்த சூகி உள்ளங் கொதித்தார். மக்களைக் காப்பாற்ற நினைத்தார். விளைவு, 1988 செப் 27 இல் தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி அகிம்சை வழியில் போராடினார்.
 

சூகியின் அரசியல் ஆர்வத்தையும் வளர்ச்-சியையும் கவனித்த ராணுவம் 1989 ஜூலை 20இல் வீட்டுக்காவலில் சிறைவைத்தது. சிறையிலிருந்த-போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் (1990) சூகியின் கட்சி 59 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. ராணுவம் தேர்தலை ரத்து செய்த--தோடு, சூகியைத் தொடர்ந்து வீட்டுக்-காவலில் வைத்தது.
 

சூகி மக்களுக்குச் செய்யும் தொண்டிற்காக, 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அதிலிருந்து கிடைத்த பணத்தில் மியான்மர் மக்களின் சுகாதாரத்திற்கான அறக்கட்டளையை ஆரம்பித்தார். 1996 இல் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்-காவலில் வைக்கப்பட்டார்.
 

1999 இல் லண்டனில் சூகியின் கணவர் உயிருக்குப் போராடியபோது, சூகியைப் பார்க்க விரும்பினார். இரக்கமற்ற ராணுவம், அவரது கணவர் மியான்மர் வர விசா கொடுக்க மறுத்த-தோடு, சூகி லண்டன் சென்றால் திரும்ப மியான்-மருக்கு வரக்கூடாது என்ற நிபந்தனை விதித்தது. கணவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்-கூட அனுமதி கிடைக்கவில்லை. 10 ஆண்டு-களுக்குப் பிறகு, தற்போதுதான் தனது இளய மகனைப் பார்த்துள்ளார். பேரக் குழந்தைகளைப் பார்த்ததே இல்லையாம்.
 

அய்.நா. சபையின் முயற்சியால் 2002 இல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். விடுதலை பெற்றாலும், வீட்டுக் காவல் இவரை விரட்டிப் பின்தொடர, மக்களுக்-காகத் தன்னை அர்ப்பணித்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலை அனுபவித்-துள்ளார். சென்ற ஆண்டு விடுதலை பெற-வேண்டிய நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்த அமெரிக்கர் ஒருவரைத் தனது வீட்டுக்குள் அனுமதித்தமைக்காகத் தொடரப்-பட்ட வழக்கில் 18 மாதங்கள் வீட்டுக்காவல் அதிகமாக்கப்பட்டது. சூகியை விடுதலை செய்ய அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தியும் செவிமடுக்காத ராணுவ அரசு 13.11.2010இல் இவரது வீட்டுக்காவல் முடிவடைந்தநிலையில், விடுதலை செய்வதற்கான உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் 12.11.2010 இல் கையெழுத்திட்டனர்.
 

ராணுவ ஆட்சியின்கீழ் சமீபத்தில் நடந்த தேர்தல் குறித்து எந்த வழக்கும் தொடரக் கூடாது என ராணுவ ஆட்சியாளர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். வழக்குத் தொடர்பவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும்வகையில் தேர்தல் கமிசன் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர்.
 எனினும், வீட்டுக்காவலிலிருந்து வெளியில் வந்த சூகி, தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த வாருங்கள் என்று ராணுவ ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வீட்டுச் சிறையி-லிருந்தாலும் தான் தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்துள்ளதாகவும், மியான்மரில் ஜனநாயகம் செழித்தோங்க நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய ஆதரவாளர்கள் விடுதலை பெறாத நிலையில் தான் விடுதலை பெற்றதாகக் கருத-முடியாது என்றும் கூறியுள்ளார்.
 

பர்மா மக்கள் விதியை நம்பிச் செயல்-படுகின்றனர். மக்கள் ஒன்றுபட்டுச் செயல்-படவேண்டும். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைச் சுடரொளி. உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்பு அதிக ஆண்டுகள் ஜனநாயகத்துக்காக _ அரசியலுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரே தலைவர் சூகிதான்.
 

தன்னலம் கருதாத இந்தச் சிறைப்பறவை இன்னுமுள்ள தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் பறவையாகப் பறந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே மியான்மர் மக்களின் _ உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

சூகியின் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் மியான்மர் மக்கள் மட்டுமல்ல, இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
 

தனிமைப்படுத்தி _ கொடுமைப்படுத்திச் சித்தர-வதை செய்த ராணுவ அரசால், சூகி மீது மக்கள் வைத்திருந்த அன்பை _ மதிப்பை _ செல்-வாக்கைச் சிறிதளவுகூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.
 

காற்றைப் பூட்டி அடைக்க முடியுமோ?

March 25, 2019, 10:22:32 am
Reply #27

AnJaLi

பக்தன்
« Reply #27 on: March 25, 2019, 10:22:32 am »
மாலை நேரம் இரண்டு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக அந்தச் சிறிய பெட்டிக்கடைக்குச் சென்றேன். பெட்டிக் கடையின் முன்பகுதியை முழுவதும் மறைத்தபடி காவி வேட்டியுடன் கையில் சிகரெட் புகை, வாயில் பான்பராக்கைக் குதப்பியபடி கழுத்தில் ருத்ராட்ச மாலை, சாம்பல் பூசிய நெற்றியோடு பக்திமான் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
 
அவர், பக்தி எப்படி இருக்க வேண்டும், எப்படி கடவுளைத் தொழுவது, மூலக்கடவுள் விநாயகர் துதி எப்படி உச்சரிக்க வேண்டும் என அந்தப் பெட்டிக்கடைக்காரருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பெட்டிக்கடைக்காரரோ கைகட்டி அவரோடு அய்க்கியமாகி அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்று கொண்டிருந்தார்.
 
எனக்குப் பின்னேயும் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
 
இரண்டு வாழைப்பழம் என்றேன். கடைக்காரரின் கவனம் முழுவதும் பக்தனின் பேச்சாற்றலுக்குக் கட்டுப்பட்டிருந்தது. ஆனால், பக்திமான் என்னைச் சற்று திரும்பிப் பார்த்து முறைத்த பார்வையை வீசிவிட்டு பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.
மூலவர் விநாயகர் என் சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்றவர் தன் கழுத்தில் கிடந்த ருத்ராட்ச மாலையுடன் கூடிய விநாயகர் டாலரை எடுத்துக்காட்டி முதல் மூலக்கடவுள் இவர்தான். பார்த்தீர்களா எலி வாகனத்தில் அமர்ந்தபடி முக்தியளிப்பதை என்றார்.
 
பொறுமை இழந்த நான் சற்று உரத்தகுரலில் இரண்டு வாழைப்பழத்தைக் கொடுத்துவிட்டுப் பேசுங்க என்றேன்.
 
அந்த பக்திமான் சற்று திரும்பிய நிலையில் நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாக ஒருகாலைப் பின்வைத்து மறுகாலை பெட்டிக்கடைப் பெட்டியின்  கீழே கொடுத்துத் திரும்பினார் பெட்டிக்கடையின் உள்ளே திரிந்த எலி வாலை மிதித்தபடி. கோபம் வந்த எலி பக்தனின் கால் கட்டைவிரலைக் கடித்துக் குதறியது.
 
நிலைகுலைந்த பக்திமான் கூக்குரலிட்டு அம்மா எனக் கத்தினார். இரத்தம் பெருக்கெடுத்து ஓட அப்படியே என் காலின் கீழே மயங்கிய நிலையில் சரிந்து உட்கார்ந்தார். பெட்டிக்கடைக்காரரால் எட்டி எட்டிப் பார்க்கத்தான் முடிந்ததே தவிர அவருக்கு உதவ முன்வர முடியவில்லை.
 
என் கையிலிருந்த கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து எலி கடித்த விரலைச்சுற்றி இரத்தம் வராமல் இறுக்கமாகக் கட்டினேன். 108க்கு போன்செய்து அவருடன் 108இல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தேன்.
 
பக்திமான் ருத்ராட்ச மாலையையும் எலி டாலரையும் அறுத்துக் கீழே போட்டுவிட்டு என்னைக் கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.

March 27, 2019, 05:09:23 pm
Reply #28

EWA

Re: பக்தன்
« Reply #28 on: March 27, 2019, 05:09:23 pm »



Thanks&Regards:

EWA

April 18, 2019, 05:30:36 am
Reply #29

AnJaLi

10 Success Stories That Started With Failure
« Reply #29 on: April 18, 2019, 05:30:36 am »
There are a number of really successful individuals in the world who did not always have things easy. Some of them had to walk through fire and overcome hardship to get to the point where they were recognized for their work and their contribution to the society. Here are ten success stories that started with failure, but the individual involved did not give up till they reached their goal.





1. Abraham Lincoln failed in almost every venture he tried before he became the President of the U.S.A. in 1860. In 1832, he lost his job and then ran for state legislature in 1832 and was defeated, He lost his job again, his fiancee died, and he had a nervous breakdown. Then he won the presidency in 1860.



Abraham Lincoln was a partner at a store in New Salem that failed in 1833, and he spent many years paying off the store’s debt. His fiancee Ann Rutledge died in 1835. In 1838, he ran for a local government seat and was defeated and also lost when he ran for Congress in 1843. He later got married to Mary Todd in 1842, but they lost three of their four children to different illnesses. The loss of their children affected them and Lincoln suffered from clinical depression.

He went on to be elected to Congress in 1846 but then lost renomination in 1848. In 1849, he was rejected for the position of land officer. Then between 1854 to 1858, he was defeated running for the U.S. Senate twice and also failed to get the nomination of vice president. He tried one more time and won the presidency in 1860. He was assassinated on April 15, 1865.