14
« on: June 06, 2025, 05:12:59 am »
பயணங்களில் என்றுமே பாதுகாப்பாய் உணர்ந்ததில்லை -
என்றுமே பயம் என் சக பயணி
எதிர்பாராமல் ஒருநாள் எம்மிருவரையும் ஒரு வாகனம்
உள் இழுத்துக்கொண்டது.
உள்ளே ஐவரை கண்டேன்.
என் சக பயணி அவள் என்னை முந்திக்கொண்டு அவர்களிடம் கெஞ்சினாள்.
ஏன் என்னை கடத்தினீங்க? என்னை எதுவும் செஞ்சிடாதீங்க . . . அண்ணா . . ஐயோ . .
அவளின் குரல் அவர்களால் மெளனிக்க வைக்கப்பட்டது.
போராடிப்பார்க்க மனம் சொல்லியது,
அதற்குள் என்னை கைகளிலும் கால்களிலுமாக ஒவ்வொருவர் பிடித்துக்கொள்ள
துகிலுரிக்க தொடங்கினார்கள்.
உதறிப்பார்த்தேன்; உதைந்து பார்த்தேன்;
முடியவில்லை, இறுக்கிப்பிடித்துக்கொண்டார்கள்.
முழுதாய் நிர்வாணமாக்கிவிட்டு இறுக்கத்தை தளர்த்தினார்கள்,
இயலுமென்றால் தப்பித்துக்கொள்ளச்சொன்னார்கள்,
இப்படியே தப்பித்தால், வசைச்சொற்களாலும்,
வசதிக்கேற்ப மாற்றப்பட்ட கதைகளாலும்,
இச்சமூகமே என்னை வன்புணரும் Leaked videos ஆக.
இயலாமையில் அங்கேயே இறக்கத்தொடங்கிவிட்டேன்,
மீண்டும் பிடிகள் இறுக்கமாக்கப்பட,
அணுவணுவாய் இரையாகி
அசைவற்றும் இரைமீட்டப்பட்டு
முழுதாய் இறந்து முடிக்க மூன்று நாட்கள் ஆனது.
என் குரல் எவரிற்கும் கேட்கவில்லை, எவரையும் இரங்க வைக்கவுமில்லை.
உயிர் ஊசலாடும் உருச்சிதைக்கப்பட்ட உடலாய் தெருவில் எறியப்பட்டுக்கிடந்தேன்.
இப்போது மண்ணிற்குள் நான் - எனை பெற்றவர்கள்
கதறி அழுவதை மட்டுமே மங்கலாக பார்க்க முடிந்தது.
என் ஆசைகள், கனவுகள், அத்தனையும் அஸ்தமித்தது மட்டும் தெளிவாக தெரிந்தது.
நன்றாய் படித்து முடித்து, நல்ல வேலையோடு அத்தனைக்கும் காரணமான பெற்றவர்களை நன்றாய் பார்த்துக்கொண்டு,
காதலித்து, மனம் பொருந்தி, திருமணம் கண்டு, பிள்ளைகளோடும் வாழ
அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின.
என்னோடு சேர்த்து என் கனவுகளும் கல்லறைகளாய் நிற்க
என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மட்டும் இம் மண் எப்படி சந்தோசமாய் வைத்திருக்கிறது?
தினமும் எனைப்போலவே பல ஆயிரக்கணக்கில் கல்லறைகள் முளைக்கின்றனர்.
நான் ஏன் என்றுமே உயிராய் பார்க்கப்படவில்லை?
அன்று வரை உடலாய், இன்று வெற்று கல்லறையாய்.
கல்லின் ஈரம் யார் உணர்வார்?
இவர்கள் யாரும் பெண்களோடு பிறக்கவில்லையா? இல்லை இவர்களோடு பிறந்தவர்கள்
மட்டும் தான் பெண்கள், ஏனையோர் காம-இச்சை தீர்க்கும் வெற்றுடலைகளா?
இவர்களையும் பெண் தானே பெற்றிருப்பாள்; அவள்
ஏன் எதையுமே இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை?
பயம் என் சக பயணி, பயம் ஊற்றித்தான் இவ்வுலகம் என்னை வளர்த்தது.
பாடசாலை, வேலை, ஏன் பக்கத்துக்கடைக்கு கூட அவள் கூடவே வரவைக்கப்பட்டாள்.
இன்று என்னாலும் அவள் பல மடங்காகி என் சக பெண்களோடு பயணித்துக்கொண்டிருப்பாள்.
என்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்?
சட்டம் திறம்பட செயற்பட, சட்டத்தோடு மக்கள் மனமும் தூர்வாரப்பட,
தம் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம் வெளியாருக்கு இன்னொரு நியாயம் என நினைக்கும் ஆண்கள் மனம் மாற,
அனுமதியின்றி எங்களை நெருங்கவே அவர்கள் மனம் சங்கடப்பட, அன்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்.
என்ன தான் செய்யலாம் எங்களை சீரளிப்பவர்களுக்கு?
எங்களை இழந்த எம் குடும்பத்தின் கைகளிலேயே கொடுத்து விடலாம்.
அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் என சட்டம் இயற்றி விடுங்கள்.
நடக்கும் கொடூரக்கொலைகளோடு மொத்தமாய் குறையும் இச்செயல்கள் எல்லாம்.
அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது.
அவை மண்ணோடு மண்ணாகின.
கடைசி ஆசையேனும் யாரும் கேட்டு நிறைவேற்றுவார்களா?
தெரியவில்லை, இருந்தாலும் கேட்கிறேன்.
மக்களே, அரசாங்கமே எனக்கு நடந்ததை போல்
இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.