GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on March 20, 2023, 09:11:03 pm

Title: கவிதையும் கானமும்-020
Post by: Administrator on March 20, 2023, 09:11:03 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-020


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk020.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: AniTa on March 21, 2023, 01:14:52 am
ஜன்னல் ஓர காற்று...
கண்களில் இயற்கையின் குளிர்ச்சி...
கனங்களை சுமந்து செல்லும் மனதிற்கு
ஆறுதல் தருவது பயணங்களே...

எப்பொழுதும் ஒன்றுக்கு பத்தாய் பேசும் மனம்,
அந்த பயணங்கள் தரும் நிமிடங்களில்
ஒன்றுக்கு ஆயிரமாய் பேசும்...
பயணத்தின் தாக்கமோ... புரியவில்லை.

பயணங்களில் ஒவ்வொரு இடமாய்
 கடந்து செல்வதைப் போல்,
மனமும் ஒவ்வொரு நிகழ்வாக
தவழ்ந்து செல்லும்...

கண்ணீரில் புதைந்த காதலே
மனதினுடைய முதல் பலி...
நினைவுகளை வெளியில் எடுத்து,
தூசி தட்டி,
முதல் பார்வை,
காதல் கடிதம்,
என்று ஆரம்பித்து... இறுதியில்
போராட்டம், பிரிவு என்று முடிந்து
கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்த
பிறகே மனம் நிம்மதியடையும்.

அந்த கண்ணீரில் அடுத்த அத்தியாயம்
மனம் திறக்கும்...
வாழ்வில் செய்த தவறுகள்,
கிடைத்த தண்டனைகள்,
அதன் வலிகளை... கண்ணீரோடு தொடுத்து
"இன்னும் சற்று அளேன் "
என்று மனம் கூறும்...

சோகத்தில் களைத்து
இறுதியில் தன்னம்பிக்கையின் அத்தியாயம்.
சோகத்தில் துளிர்ந்த கண்ணீரை
தொட்டு தேய்ந்த வலியை
உணர்ச்சியில்லாமல் ஆக்கி...
எதுக்கும் கலங்க கூடாது என்ற
நம்பிக்கையை தருவதும் பயணங்களே...

இது பயணங்களில் கட்டாயம் ஏற்படும்
மனதின் சுழற்சி... என்று அறிந்தும்,
இதோ தயாராகிவிட்டேன் எனதின்
அடுத்த பயணத்திற்கு...
வாழ்வில் நடந்ததை சிந்தித்து
பார்த்தால் தான்,
நடக்க போவதற்கு வழி கிடைக்கும்...

என் பயணங்களில் தளராமல்
யோசிக்கும் என் மனதிற்கு நன்றி...






சிறு பதிவு : நட்ட நடு ராத்திரியில் இக் கவியை யோசித்த என் மனதிற்கு நன்றி 😂... 1 hour குள்ள எழுத உதவி செஞ்ச மூளைக்கும் நன்றி 🤣
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: Sanjana on March 21, 2023, 04:09:59 am
CONGRATS TO GTC FM AND GTC.. KAVITHAIYUM GAANAMUM REACHED ITS 20.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
CONGRATS TO ALL POETS OF KG 💐💐💐
கவிதையும் கானமும் குழுவினருக்கு வாழ்த்துகள்
( RJ RIJIA, RJ MIST, COFFEE BOY, OMICRON,DISCOVERY, ISHAN)💐💐💐💐💐💐💐💐💐



இலையுதிர் காலம் தனது சாயலை காட்டியது
வானம் அதன் சாம்பல் நிறத்தை சூட்டியது
கார்மேகம் அலை அலையாக வந்து செல்கிறது
காற்று புதிய தெளிவுடன் வீசுகின்றது
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பொழிகின்றது
பூமியில் இருந்து புனிதமான வாசனை வெளிப்படுகிறது….

லேசான நடுக்கத்தை நான் உணர்கிறேன்
என் இடது கையை யன்னல் வழியாக வெளியே அசைக்கின்றேன்
என் தோலில் இனிமையான ஒலி கேட்கிறேன்
ஒவ்வொரு துளியும் என் கையில் இசை மீட்டுகின்றது
ஒரு கணம் எனக்கு அமைதி வழங்கப்படுகின்றது
அது நொடிகள் தான் ஆனால் அது மணிநேரமாக உணர்கிறேன்….

இனிமையான இப்பயணம் ஆரம்பிக்கும் தருணம் இது
மனதில் எதோ பல நினைவுகள் ஊசலாடும் தருணம் இது
காலத்தால் அழியாத காதலின் நினைவுகள் மனதை வதைக்கும் தருணம் இது
இருவரும் அன்று மழையில் சந்தித்தது நினைவுக்கு வரும் தருணம் இது
மனதில் பல்லாயிரம் கேள்விகள் எழும் தருணம் இது
விடை தேடி மனம் எங்கோ தொலைகின்ற தருணம் இது….

கண்களில் நீர் சொட்டியது
அது என் மறுகையை உரசியது
ஒரு கையில் மழைத்துளி இசைபாடியது
மறுகையில் கண்ணீர்த்துளி வலி கூட்டியது
காதலின் வலி மனதுக்கு புரிந்தது
எப்போது இந்த பயணம் முடியுமென மனம் ஏங்கியது….

"சின்ன சின்ன மழை துளிகள்" என்ற பாடல் வரிகள் மனதில் ஒலிக்க
அமைதியான ரயில் பயணம் தொடர
மீண்டும் நான் மழையை ரசிக்க
மழையின் நன்மையை உணர
என் மனதோ சற்று லேசாக
உணர்ந்தேன் என் வாழ்க்கையின் அர்த்தத்தை....


வாழ்க்கை எனும் ரயில் பயணத்தை தொடர்ந்தபடியே
சஞ்சனா(Sanju)😘.

Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: Barbie Doll on March 21, 2023, 11:06:23 am

""மாலையில் யாரோ மனதோடு பேச''
மார்கழி வாடை மெதுவாக வீச'' மெல்லிசையில், மெல்லமாய் தொடங்கும், அந்தி நேர ரயில் பயணமிது..!
 
குழறிய வார்த்தைகளின் குதூகலமா..?
வம்படியாய் சிக்கிக் கொண்ட விசித்திரமா?
வார்த்தைகள் கோர்த்து தீட்டிய வர்ணமா?
இவை ஒன்றாக கலந்து எழுதிய புது மொழியா?
என்றெண்ணுமளவு, கனவுகள் பல நூறு சுமந்து, சுதந்திரமான பயணமதை இனிதே தொடங்கினாள்..!

சில்லென்ற காற்று வீசும் சாளரத்தின் அருகிலே, சிற்றிதழ் சொந்தக்காரி சாவகாசமாய் அமர்கிறாள்..!

பச்சை பசேலென்ற பசுமையான வயல்வெளியின், அரும்புவிட்ட நெற்க்கதிரின் வாசமும்,  இனிமையான சுகந்தமும்..!

தாழப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் பட‌ படக்கும் சத்தமும், ரயிலின் ஆராவார சத்தத்துடன் போட்டி போடும் தருணமும்..!

கடந்து செல்லும் கண் கொள்ளா இயற்கையின் நடுவே, ஆயிரம் கதை பேசும் சொந்தங்களும், சிக்காமல் சிட்டாக அங்குமிங்கும் ஓடித் திரியும் சின்னஞ் சிறு மழலைகளும்..!

மொழிகள் ஒருமித்து எதிரொலிக்கும் சத்தத்தின் நடுவிலே, இனிப்பான தேநீரும், பலவகை நொறுக்கு தீனி விற்பவரின் கணீரொலியும்..!

இவையாவும் ரசித்த படி அமர்ந்திருக்கும் அமைதியான அவள் கண்களும், கதை பேசுதே பயண மொழி..!

இணையா இரயில் பாதையே.."
இணைந்து விடும் மனங்களே.."
இத்தனை ரம்மியங்கள் தாண்டி, இதமாக இதயம் துளைக்கும், என்னவன் நினைவுகளே..."

சிதறிய சிந்தனையில், மனம் லயித்த அவளின், எங்கோ சென்ற நினைவை, நிகழுலகம் கொண்டு வந்தவர் யாரோ..?
சட்டென்று பெய்த சாரல் மழை தான் அதன் பெயரோ..?

கன்னம் தொட்ட மழைத்துளியே..!
கார் கூந்தல் நனைக்கும் கருமேகமே..!
குளிர்ச்சியான சிலிர்ப்பூட்டும் சிறுதுளியே..!
மண் மணம் கமழும், மழை வாசமே..!
கையில் வாங்கி, அள்ளி வீசி ஆனந்தம் கொள்ளும் என் சுவாசமே..!
மனம் தெவிட்டா மகிழ்வான பயணமிது!
ஆனந்தத்தின் எல்லை தொடும் நெடுந்தூர பயணமிது!

கனவுகளை ஸ்தம்பிக்க வைத்து, காற்றிலே பறக்கும் தொடர்வண்டி,!
இறுகிய மனதுடன், பிரியா விடை கொடுத்து, இறக்கி வைக்கும் ரயில் வண்டி.!

சிலமணி நேர சந்திப்பின் பிரிவில், சமாதானமின்றி இறங்கி செல்லும், நினைவுகளை துரத்தி செல்ல முடியா பயணம் இது..!

மொத்தத்தில் மிச்சம் வைக்காத, அத்தனை நினைவுகளடங்கிய, அனுபவங்களின் தொடர் பயணம், தொடர்கின்ற பயணம்..!
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: LOVELY GIRL on March 21, 2023, 12:16:38 pm
வாழ்க்கை ஒரு பயணம்!

ஒவ்வொரு பயணத்திற்கும்
ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு!

நேர்மறை மட்டும் எதிர்மறை
இரண்டையும் கொண்ட பயணம்!

தேர்வுகளால் நிறைந்த பயணம்!
அடர்த்தியான மழை போல துன்பம் வந்தாலும்..
அதை தைரியமாக பயணிக்க
கற்றுக்கொடுக்கும் இந்த பயணம்!

வலிகளை சுமந்து வழிகளை தேடும்
வாழ்க்கை பயணம்..

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான பயணம்!

பயணத்தை மகிழுங்கள்!

முடிவே தெரியாத பாதையில்
பயணம் செய்கிறேன்..
முடிவில் நீ இருப்பாய் என்கிற
நம்பிக்கையில் ...!

இப்போது தொடர்கிறது என் வாழ்கை பயணம்!
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: Ishan on March 21, 2023, 06:51:12 pm
நீண்ட நெடு நெடுவாய்,
வளைவும், நெளிவுமாய்
காலை நேர தென்றலில்,
ஓர் ரயில் பயணம்....

ஜன்னல்லோரம்
நெஞ்சினுள் சிலிர்க்க வைக்கும்
ஓர் இதமான காற்று.....

சற்றென்று மாறுகிறதே ஓர் வானிலை !

வானில் திடீரென்று ஓர் வானவேடிக்கை
மின்னலின் வெளிச்சக் கீறலும்,
செவிக்களுக்கு இசையாய்
இடி என்னும் மத்தளம் கொட்டி
மனதுக்குள் அச்சம் எழுப்புகிறதே.....

பரவசமூட்டும் தென்றலும்,
பயணத்தில் கடக்கும்
மரங்களும், செடிகளும்,
மகிழ்ச்சியில் சாய்ந்து சாய்ந்து
ஒரு சந்தோஷ வரவழைப்பை தருகிறதே....

கண்ணில் படும் தூரம் வரை
காரிருள் சூழுந்து,
நீல வண்ண வானத்தையும் மறைத்து
இரவையும் எழுப்புதே,

மென் சாரல் மழையும், தூறலும்
மேனியை மெய் சிலிர்க்க  வைத்து,
மெது மெதுவாய் என் தேகங்களை
தீண்டிச் செல்ல எண்ணுதே...

பயணத்தில் அங்கும் இங்கும் ஒரே கூச்சலும்,
எங்கோ ! குழந்தையின் அழுகுரலும்....
இடையில் தொலைபேசியின் மெல்லிசையும்,
மேலும் இப்பயணத்தின் அழகை கூட்டுதே....

மனம் அலை பாயும் தருணத்தில்
இப்பயணம் தன்னையும்
ஓர் சிந்தனை கவிதையில் ஆழ்த்துகிறதே....
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: Vaanmugil on March 21, 2023, 09:22:11 pm
பயணங்கள் எல்லோருக்கும் பிடித்ததில் ஒன்று....
அதிலும், ரயில் பயணம் யாவருக்கும்
இனிமையானதும் ஒன்று....

தொடர்வண்டி பயணத்தில்
தொடர்கின்ற பயணம் இது,
தண்டவாளத்தின் நடுவே,
தடக் தடக் என்று
கானம் இசைத்து செல்லும்,
அழகிய பயணமிது....

இயற்கையின் அழகில்
தென்றல் என்னை தீண்டி செல்கையில்...
தன்னை மெய் மறக்க செய்கிறதே....
தானும் அதில் மயங்கியே ரசிக்க சொல்கிறதே....

வானில் கார் மேக கூட்டம் 
பல கரு உருவம் காட்டியே
தன்னை ஈர்க்கச் செய்கிறதே....
தவமாய் வர்ண தேவனை
பூமிக்கு வரவழைக்க செய்கிறதே....

மழையே ! இப்பூமியில்
உன் துளி வீழ்ந்ததும்
மண்ணின் மனம்
என்னை மயக்கத்தில் வீழ்த்தியதே....

என்னை தொட்டுத் தழுவிச் செல்லும்
மழைச் சாரலே,
முத்து முத்தாய் என்னை
முத்தமிட்டுச் செல்லும்
அழகிய சின்னசிறு துளி தூறலே.....

ஜன்னோலோர பயணத்தில்
உன்னை கண்டதும்,
மழலை போல் தன்னையும்
குறும்புத்தனம் செய்ய தூண்டும்
மழைத் தூறலே....

விண்ணோடும் மண்ணோடும்
உன் ஓசை சத்தமும்,
ஜன்னலோர கம்பியில்
உன் முத்துத்துளி சாரல் அழகிலும்,
என்னை முனுமுணுத்து ரசிக்க தூண்டுதே...

மழையே,
என் ரயில் பயண துணையே,
இப்பயணத்தில் நான் கண்டேன்
என் புதுமுக உணர்வை உன் ரசனையிலே....
Title: Re: கவிதையும் கானமும்-020
Post by: kittY on March 22, 2023, 08:48:30 am
தடம் பிரலாமல் தடம் பார்த்து செல்லும் தொடர்வண்டி... என்னை சுமக்க நீ இருக்க.. இயற்கை ரசிக்க கற்றுத்தந்த முதல் பயணம் இது....

நீண்ட தூரம் போகனும்..
நினைவு இனிமை ஆகனும்....ஜன்னல் ஓரம் கரம் நீட்டி கொட்டும் மழையை ரசிக்கணும்...

எண்ணம் சிறகை விறிக்குது... பசுமை கண்டு வியக்குது....
ரசனைக்கு எட்டா நினைவில் அது ரசிக்க வைத்த பயணமிது....

 சில்லென்று காற்று வந்து மெல்லிசை பாடுது.... மழை சாரலும் துளி துளியாய் தாளம் போட... என் கரங்கள் தொட ஜாலம் காட்டுது... என் மனம் அலை பாயுது இயற்கையை  என் மீது கொண்ட காதலை கண்டு....

 இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது.... (இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது....)
கபடமில்லா இயற்கை அதை என்னை மறந்து ரசித்து விட்டேன்....

தொடர் வண்டி பயணமிது இன்னும் தொடராதா என்று ஏக்கத்தோடு விடை கொடுத்து செல்ல.... ஜன்னல் வெளியே நீட்டிய கரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சி விளையாடிய மழையில் இருந்து விட்டு பிரிய..... மழை சாரளும் அதிகமாய் தூறல் இட தூறலோடு வந்த கண்ணீர் அது என்று நான் புரிந்து கொண்ட.... இயற்கையோடு வந்த காதல் இது....

விடை கொடுத்து 
நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி,(நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி)😔