உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-039
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk039.jpg)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
"அம்மா மாதிரி"
ஆண்களை உணர்ச்சிவசப்படும் தருணங்களில் கவனித்ததுண்டா ?
நன்றாய் அக்கறைப்படும் ஆசிரியையில்;
நல்வழி காட்டும் நண்பியில்;
சோர்ந்து விழ சேர்ந்து நின்று "பாத்துக்கலாம்" என தோள் தரும் காதலியில்;
"என்கிட்ட ஏன் சொல்லல" என உரிமையோடு கோபிக்கும் தமக்கையில்;
பிறப்பிடம் விட்டு பிழைப்பிற்கு வந்த இடங்களில்
"சாப்பிட்டியா" என கேட்கும் ஒவ்வோர் குரலிலும்;
"இளைச்சு போய்ட்ட" ன்னு சமைத்து தரும் அக்காமார்களின் தூய அன்பிலும்;
அப்படியே அம்மாவின் சாயல்,
அந்நேர ஆண் மனத்தில் அசரீரியாய் கேட்கிறது.
"இவர்கள் அப்படியே அம்மா மாதிரி"
ஆம், அம்மாவை தான் காண்கிறேன் அத்தனை பேரிலும்.
அந்த "அம்மா மாதிரி" அன்பைத்தேடி தான் வாழ்க்கை முழுதும் ஓடுகிறேன்.
அன்பு காணும் இடமெல்லாம் அவளை அங்கு பொருத்தி அழகு பார்க்க
"அம்மா மாதிரி" எனும் சொற்றொடரின் செறிவு காலத்தோடு அதிகரித்தே செல்கிறது.
அம்மா அனைத்தும் ஆகி விடுகிறாள் - கடவுள் போல
ஆண்பிள்ளைகளின் முதல் காதலி அவள்.
போர்க்களம் தான் வாழ்க்கை என்ற போதும்,
கேடயமும் ஆயுதமும் தான் தேவையென்ற போதும்,
கேடயமாய் தான் நின்று
ஆயுதத்தை கையில் தந்து
படித்துக்கொள் என்றவள் அவள்.
இரும்பு கேடயமல்ல;
இரத்தமும் சதையுமாய், உரிமையும் உணர்வுமாய்
அவள் அன்பெனும் கேடயம்.
தகப்பன் அன்பு கிடைக்காத போதும்
தகப்பனும் தாயுமாய் நின்று காத்தவள்.
போர்க்கள வாழ்வில் எனை நானே பார்த்துக்கொள்ளும் போதே
இத்தனை வலிகளை கடக்கிறேன்;
அவள் எமக்காய் தனியே எத்தனை வலிகளை கடந்திருப்பாள் - அத்தனையோடும்
அவற்றை புறம் வைத்து அன்பை மட்டுமே எமக்கு கடத்தியிருக்கிறாள்.
கைம்மாறாய் எனக்கு ஒன்றே உண்டு ...
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
(திருக்குறள்) "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"
அத்தனை பேரிலும் நான் அம்மாவை கண்ட போதிலும்
அம்மாவை அறிந்தவர்கள் என்னில் தேடுவதும் அதுவே தான் - அம்மாவின் நற்குணங்கள்
அவர்கள் மனதில் இருந்து
"அப்படியே இவன் அம்மா மாதிரி" எனும் வாழ்த்திற்காகவே ஓடலாம்,
அது தான் வாழ்க்கை.
அனைத்து பெண்களிலும் அம்மாவை தேடியவன் - தேடலோடு
அம்மாவிற்கான என் அன்பையும் மதிப்பையும்
அம்மாவெனவே அனைத்து பெண்களிடமும் கொடுக்க நினைக்கிறேன்;
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
நிச்சயம் பெற்றுவிடுவேன் என் கிரீடத்தை
"அப்படியே இவன் அம்மா மாதிரி"
சி. வி. ஆர்.