25
« on: April 30, 2023, 11:51:50 am »
பரிசு இல்லா, பதக்கம் இல்லா,
பந்தயக் குதிரை உழைப்பாளி!
பசிக்காக, பல தடைகள் உடைப்பான், நிச்சயமாக அவன் தொழிலாளி!
ஏறிய விலைவாசியும், ஏறாத சம்பளமும், ஏட்டிக்குப் போட்டியாய் நின்றாலும்..,
இயந்திர உலகில், தொழில்கள் பல செய்யும் உழைப்போரை யாவரும் மறந்தாலும்..,
உழைப்புக்கு குறைவான ஊதியமே, உலகம் கொடுத்தாலும்..,
அவன் உயர்வுக்கு வழிகாட்ட, உலகமே கொஞ்சம் மறந்தாலும்..,
முண்டியடித்து முன்னேற முயலும், உழைக்கும் மனிதனின் ஊக்கம் தான்.!
அழகாய் சிரிக்கும், அத்தனை பொருளிலும், ஒளிந்திருக்கும் அவன் ஏக்கம் தான்.!
சுருங்கிய தோலும், சுருசுருப்பாக நாளும் உழைப்பை கொடுக்கிறதே.,!
காத்திருக்கும் ஓட்டுநரின், காலச்சக்கரமும் கடல்கடந்து காசை நோக்கி ஓடியதே.,!
பசியும் பட்டினியும் தன்னில் கொண்டு, விரல் வலிக்க விளைச்சலை கொடுக்க, விவசாயத்தை கையிலெடுத்தவரே.!
நெய்து நெய்து நொந்து போன, நெசவாளரும் மனதால் பட்டுடுத்த ஏங்கி தவிப்பாரே.!
துப்புரவாளரின் துயரம் தன்னை துச்சமென நினைந்து, ஊர் தூர நின்று இகழுது.!
விண்ணை தொடும் கட்டிடங்களும் அவன் உழைப்பை, தலை நிமிர்ந்து நோக்குது.!
துணிக்கடையில் துவண்டு போன கண்களில் கண்ணீரும் வற்றி கிடக்குது.!
தெருவோர கடைகளும் தொய்வின்றி உழைத்து, சில நூறுக்காக ஏங்குது!.
கை வலிக்க கணிணியில் போராடும், நவீன உழைப்பாளிகள் மனமும் வாடுது.!
உலக பொருளாதாரத்தின், ஊன்று கோலாய் இருப்பார்கள், என்றே உலகம் நம்புது.!
தெளிவான மனித இனமோ, தேவையற்ற இடங்களில் பணத்தை அள்ளி வீசுது.!
காவலாய், ஏவலாய் மாறி போன கவலை தான் கடைசியில் மிஞ்சுது.!
சுற்றி நிற்கும் சயநலக் கூட்டமோ தூற்றி பேச கேக்குது.!
சுருக்கென்ற வார்த்தை பேச சூழ்நிலை தான் இங்கே தடுக்குது.!
இயலாமையை மறைப்பானே,
இயன்ற வரை உழைப்பை கொடுப்பானே,!
கடின உழைப்பில் கவலைதனை மறப்பானே ,
உழைப்பே உயர்வென சமாதானம் கொள்வானே.!
அலுப்பை மறக்க உழைப்பை கொண்டாடும் நாளும் நம்பிக்கை தாங்கி வந்ததிங்கே.!
உரிமை குரலில் உயிரை கொடுத்து உதயமானதே இந்த மே தினமே.!
போராடி பெற்ற எட்டு மணி நேரம் எட்டாக் கனியாக நேரம் கடந்து போகுது அனுதினமே.!
உணர்வற்ற சிரிப்பும் முகத்திலே முனங்கலுடன் வந்து மலருது.
ஊதியத்துடன் விடுமுறை என்று வெறுமனே மனம் கொண்டாடுது.
முதல் போட்ட முதலாளியின் முகம் மலர வைத்த தொழிலாளி..!
உழைப்பை உறிஞ்சி உயிரை குடிக்காமல் உயர்வை வழங்குமா இந்நாளில்?
வியர்வை சிந்தும் தொழிலாளி வர்க்கம் ..!
அமைத்து கொடுப்போம் அவன் வாழ்வில் சொர்க்கம்..!
அடிமட்ட தொழிலாளியின் அசராத உழைப்புக்கு மே தின நல்வாழ்த்துக்கள் .!