POEMS - கவிதைகள் > படித்து ரசித்த கவிதைகள்

வைரமுத்து கவிதைகள்

(1/2) > >>

அகிலன்:
கவியரங்கில் கவியரசு

முச்சங்கங் கூட்டி
…..முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
…..அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
…..சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
…..அமைத்த பெருமாட்டி !

வட்டிக் கணக்கே
…..வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
…..சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
…..சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
…..விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
…..உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
…..போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
…..ஏழை வணங்குகின்றேன்!

மலையளவு நெஞ்சுறுதி
…..வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
…..கனிந்துருகும் கவிக்கனிகள்
இவைதலையாய் ஏற்றமுற்று
…..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
…..அன்புமிகும் என்தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
…..கூட்டியதோர் கூட்டத்தில்
நாட்டத்தை நாட்டுவதில்
…..நற்கலைஞன் நீயிலையோ!
அந்தச் சிரிப்பலவோ
…..ஆளையெலாம் கூட்டிவரும்
அந்தச் சிறுமீசை
…..அப்படியே சிறைப்படுத்தும்
சந்திரனைப் போலத்
…..தகதகவென்றே ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
…..அரசியலே உருவாகும்!
எந்தத் துயரினிலும்
…..இதயம் கலங்காதோய்!
முந்துதமிழ் தோழ!
…..முனைமழுங்கா எழுத்தாள!
திருவாரூர்த் தேரினையே
…..சீராக்கி ஓடவிட்டுப்
பல்கும் மழைத்துளியைப்
…..பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதி தலைவ!
…..கவிதை வணக்கமிது!

போட்ட கணக்கிலொரு
…..புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக்
…..குறையாப் பொருள்வளர்க்கும்
நாட்டுக்கோட்டை மரபில்
…..நானும் பிறந்தவன்தான்
ஆனாலும் என்கணக்கோ
…..அத்தனையும் தவறாகும்!
கூட்டுகின்ற நேரத்தில்
…..கழிப்பேன்: குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக்
…..கூட்டுவேன்; கற்பனை
பெருக்குவேன்; அத்தனையும்
…..பிழையென்று துடைப்பத்தால்
பெருக்குவேன்; ஏதேதோ
…..பெரும்பெரிய திட்டங்கள்
வகுப்பேன்; வகுத்ததெலாம்
…..வடிகட்டிப் பார்த்தபின்பு
சிரிப்பேன்! அடடா! நான்
…..தெய்வத்தின் கைப்பொம்மை!

அன்றொருநாள் எந்தன்
…..அப்பனோடும் என்அன்னை
ஒன்றாமல் சற்றே
…..ஒதுங்கிக் கிடந்திருந்தால்
என்பாடும் இல்லை!
…..என்னால் பிறர்படைத்த
துன்பங்க ளில்லை!
…..சுகமாய் அவர்கண்ட
கூட்டலினால் என்னைஇங்கே
…..கூட்டிவந்து விட்டுவிட்டார்
கூட்டிவந்து விட்ட
…..குறைமதியை என்தோழர்
மேடையிலே கூட்டி
…..விளையாட விட்டுவிட்டார்
எத்தனையும் கூட்டி
…..ஐந்தொகை போட்டுப்பார்த்தால்
இத்தனைநாள் வாழ்வில்
…..எதுமிச்சம்? என்அன்னை
தந்த தமிழன்றிச்
…..சாரம் எதுவுமில்லை
‘போனால் போகட்டும்
…..போடா! இறந்துவிட்டால்
நானாரோ நீயாரோ!’
…..நல்ல பொழுதையெலாம்
அழுதே கழிக்காமல்
…..ஆடித்தான் பார்க்கின்றேன்!
கொத்தும் இதழழகும்
…..கொஞ்சும் இடையழகும்
சேலம் விழியழகும்
…..சேர்த்துப் பிறந்திருக்கும்
கோலக் கிளிமொழிகள்
…..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்!
கையில் மதுக்கிண்ணம்
…..கன்னி இளங்கன்னம்
காதலுக்கே தோன்றினான்
…..கவிஞன்எனும் வண்ணம்

இரவை பகலாக்கி
…..இன்பத்தைக் கூட்டுகின்றேன்!
அரசியலைப் பேசி
…..ஆத்மச் சிறகுகளை
உரசிக் கொதிக்கவைத்த
…..உற்பாதம் தீர்ந்துவிட்டேன்!
உடைந்துவிட்ட கண்ணாடி
…..ஒருமுகத்தைக் காட்டாது!
ஒடிந்துவிட்ட மரக்கிளையை
…..ஒட்டிவைத்தால் கூடாது!
காலம் சிறிதென்
…..கனவுகளோ பலகோடி!
காதல் ரசத்தினிலே
…..கனியக் கவிபாடிக்
கனவில் மிதக்கின்றேன்
…..கற்பனை நீராடி!
எண்ணிவந்த எண்ணம்
…..எல்லாம் முடிந்ததென்று

கிண்ணம் உடைந்தால்என்
…..கிறுக்கும் முடிந்துவிடும்!
பிறப்பில் கிடைக்காத
…..பெரும்பெரும் வாழ்த்தொலியும்
இறப்பில் கிடைக்காதோ?
…..என்கவிக்குத் திறமிலையோ?
அண்ணனுக்குப் பின்னால்
…..அழுதுவந்த கூட்டமெலாம்
கண்ணனுக்குப் பின்னாலும்
…..கதறுவர மாட்டாதொ!
‘வாழ்ந்தநாள் வாழ்ந்தான்;
…..வாழத் தெரியாமல்
மாண்டநாள் மாண்டான்!
…..மானிடத்தின் நெஞ்சத்தை
ஆண்டநாள் ஆண்டான்!
…..ஆண்டவனின் கட்டளையைத்
தோள்மீதில் ஏற்றுத்
…..தொடர்ந்தான் நெடும்பயணம்’

என்பாரும், ‘பாவி!
…..எவ்வளவோ பொருள் சேர்த்தான்
எல்லாமே தொலைத்தான்;
…..எம்மைக் கதறவிட்டுப்
போயினன்’ என்று
…..புலம்பியழும் பிள்ளைகளும்
கூட்டத்தில் சேர்ந்துவரும்!
…..குழப்பம் முடிந்ததென
நிம்மதியும் சில்லோர்
…..நெஞ்சி பிறந்திருக்கும்!
‘ஏடா அவலம்;
…..என்ன இது ஒப்பாரி?’
என்பீரோ! சொல்வேன்!
…..எல்லாம் மனக்கணக்கு!
கூட்டல் எனஎன்பால்
…..குறித்துக் கொடுத்தவுடன்
கூட்டித்தான் பார்த்தேன்
…..குடைந்து கணக்கெடுத்தேன்
முடிவைத்தான் பாட
…..முந்திற்றே யல்லாமல்
வாழ்வைநான் பாட
…..வார்த்தை கிடைக்கவில்லை

அகிலன்:
தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!

SuNshiNe:
சிறிய கவிதை ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கவிதை.. 😊

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்.. 💔
💝Regretting is a miserable feeling in a life ... Cherish your love when they are with you

Vaanmugil:
வைரமுத்துவின் - அம்மா கவிதை.....


ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறு மொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும்

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்
உன் ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்தமாயிருச்சே!

வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரை சேத்து விட்டவளே!

Vaanmugil:
வைரமுத்துவின் - காதலித்து பார்......

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...

ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்...
கையெழுத்து அழகாகும்.....
தபால்காரன் தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்...
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக உன்னால் முடியுமா?
அஹிமசையின் இம்சையை அடைந்தது உண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
சபையை தனிமையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம் அடையவேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

சம்பர்தாயம் சட்டைபிடிதாலும்,
உறவுகள் உயிர் பிடிந்தாலும்,
விழித்து பார்க்கையில்
உன் தெரு களவுபோய் இருந்தாலும்,
ஒரே ஆணியில் இருவரும்
சிக்கன சிலுவையில் அரையபட்டாலும்,
நீ நேசிக்கும் அவனோ, அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்,
காதலித்து பார்!

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம் ..
காதலித்து பார் ..............

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version