GTC FORUM
General Category => Cooking Tips - சமையல் குறிப்புகள் => Topic started by: Sanjana on September 11, 2022, 10:52:59 am
-
1.ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவகுணங்கள்!
நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், டோக்கோபெரால் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
நன்மைகள்
ஆன்டி – ஆக்சிடன்டுகள் ஸ்ட்ராபெரியில் இருப்பதால், இவை தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
ரத்த அணுக்களை உற்பத்தி செய்து புற்றுநோய் வரமால் பாதுகாக்கிறது.
ஸ்ட்ராபெரியில் பல அமிலங்கள் இருப்பதால், இந்த பழத்தினை ஜூஸ் செய்து குடித்தால், பற்களில் உள்ள கரைகள் எடுத்து வெள்ளையாக மாற்றுகிறது.
பெண்களின் அழகை பாதுகாக்கவும் இந்த பழம் பயன்படுகிறது.
சருமத்தின் நிறத்தினை மாற்றி பொலிவுடன் வைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கிருமி தொற்று நோய்கள் உண்டாவதை தடுக்கிறது.
செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து, இதயத்தின் செயல் திறனையும் கூட்டுகிறது.
-
2. டிராகன் பழத்தின் மருத்துவகுணங்கள்!
‘டிராகன் பழம்’ என்ற வித்தியாசமான பழம், தற்போது பழ அங்காடிகளில் கிடைக்கிறது.
பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.
அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும்.
சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.
வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது.
டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
-
3.துரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்
முக்கனியான பலாவுக்கு ஈடு இணையாக கூறப்படுகின்ற துரியன் பழம் பலாப்பழத்தைப் போல் இருக்கும். பலாப் பழத்தை விட சற்று சிறியதாக இருக்கும். வெளிப்புறத்தில் கூர்மையான முட்கள் இருக்கும். இது பலாப் பழத்தைப் போலவே சுளைகளைக் கொண்டது.
துரியன் பழம் ஆசியாவில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற இடங்களில் விளைகிறது. மலேசியாவிலும், தாய்லாந்திலும் அதிகம் விளைகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இவை அதிகம் வளர்கின்றன. துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டதுபோல் இருக்கும். ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் ஒருவர் முழுப் பழத்தையும் சாப்பிடும் அளவுக்கு சுவை கொண்டது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இப்பழத்திற்கு ஏற்ற சீசனாகும். மலேசியா போன்ற நாடுகளில் எப்போதும் சீசன் உண்டு. சீனர்கள் சாப்பிடும் முக்கிய பழங்களில் துரியன் பழமும் ஒன்று. சரி இப்போது இப்பழத்தின் மருத்துவகுணங்களை பார்ப்போம்.
உடல் வலுவடைய
சிலருடைய உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து இருக்கும். இதனால் இவர்களின் உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகின்றது. இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்தம் சுத்தமடைய
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
நரம்பு புத்துணர்வடைய
தற்காலத்தில் பெரும்பாலானோர் நரம்பு தளர்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்தக் குறையை போக்க துரியன் பழம் மிகவும் பயன்படும். கிடைக்கும் காலங்களில் துரியன் பழத்தை வாங்கி சாப்பிட்டுவந்தால் நரம்புகள் புத்துணர்வடையும்.
கருப்பை பலப்பட
கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும், ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கலை நோயின் தலைவாசல் எனக் கூறலாம். மலச்சிக்கலை நீக்கினாலே நோயின்றி நூறாண்டு வாழலாம். மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை மிளிரச் செய்யும், எனவே கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு பயனடையலாமே.
-
4.நாவற்பழத்தின் மருத்துவகுணங்கள்!
நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.
நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் வீதம் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.
சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை நிவர்த்திசெய்ய நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.
நாவல் மரத்தின் தளிர் இலைகளை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பேதியைக் கட்டுப்படுத்தலாம்.
நாவல் மரத்தின் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்துப் பின் இதமான சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் குடல்புண், தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.
நாவற்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடையும், இதய நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.
-
5. தொப்பையை குறைக்கும் அன்னாசி
அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையத் தொடங்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அன்னாசிப் பழமானது அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளித் தருகிறது.
குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.
அன்னாசிப் பழத்தில் உள்ள தாதுச் சத்துகள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கின்றன.
அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், பித்தக் கோளாறுகள், செரிமானக் கோளாறுகள், உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது. தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.
பொதுவாக உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொப்பை பெரிதாகக் காணப்படும். அந்தத் தொப்பையைக் குறைப்பதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் நினைத்த பலன் கிட்டாமல் வாடிப்போய் இருப்பார்கள்.
அவர்கள் தமது தொப்பையைக் கரைக்க அன்னாசிப் பழம் உதவும். அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையத் தொடங்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
6.நார்த்தம் பழத்தின் மருத்துவகுணங்கள்
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும்குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும்.
இவற்றில் நீர்நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் அனைத்துமே பயன்கொண்டவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் உள்ளன.
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
உடல் சூடு தணியும்
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
உடல் வலுப்பெற
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.
சுகமான பிரசவம்
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.